அதிமுக வழக்கில் நீதிபதிகள் கேட்ட அந்த கேள்வி.. மௌனம் காத்த இபிஎஸ்- ஓபிஎஸ்.. பதில் சொன்ன வைரமுத்து
டெல்லி: அதிமுகவின் அவைத் தலைவர் என்றால் என்ன என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போல் பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு பதிலளித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அதிமுக பொதுக் குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர், வழக்கு நிலுவையில் இருப்பதால் கட்சி பணிகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

கழகம் என்றால் என்ன
இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது கழகம் என்றால் என்ன என கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கழகம் என்றால் கட்சி என்றார். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் என்றார் என்ன அர்த்தம் என கேட்டனர். அதற்கு இரு தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்களும் அவை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய பெயர்களின் சுருக்கம் என விளக்கினர். பின்னர் விளக்கமே கேட்காமல் ஓபிஎஸ்ஸை நீக்கியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎல் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து விசாரணையில் நீதிபதிகள் அவைத் தலைவர் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் அமைதியாக இருந்த நிலையில் 3ஆம் தரப்பை சேர்ந்த வைரமுத்து தரப்பு வழக்கறிஞர், பொதுக் குழு, செயற்குழுவை தலைமையேற்று நடத்துவரே அவைத் தலைவர். பொதுச் செயலாளருக்கு இருக்கும் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 2017 க்கு முன் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 5 ஆண்டு காலமாகும். அதிமுகவுக்கு தேவைப்படும் அவசர நடவடிக்கைகளை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. பொருளாளரை நியமிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் சார்ந்த விண்ணப்பங்கள்
தேர்தல் சார்ந்த விண்ணப்பங்களில் இருவருக்கும் கையெழுத்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக போட்டியிடுவதற்கான திருத்த விதிகளில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகளில் திருத்தம் உள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை அவசியம் என்றும் கட்சியில் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். எங்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருந்தோ அங்கெல்லாம் பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வைரமுத்து தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது.












Click it and Unblock the Notifications