மத்திய பாஜக அரசின் அணை பாதுகாப்பு மசோதா- அதிமுக கடுமையாக எதிர்க்கும்: நவநீதகிருஷ்ணன் எம்.பி.
டெல்லி: மத்திய பாஜக அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் ராஜ்யசபா குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ஒரே சீராக பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே மாநிலங்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. . தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் வரும் நிலையில் அணைகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்புக்கு காரணம்.
நாடாளுமன்றம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங். எம்.பி.க்கள் மட்டும் நாள்தோறும் போராட்டம்
ஏன் எதிர்ப்பு?
தமிழகத்துக்கு சொந்தமான 4 அணைகள் கேரளாவில் அமைந்திருக்கின்றன. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் 4 அணைகள் தொடர்பான தகவல்கள் கேரளாவிடம் தமிழகம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கூட்டாட்சிக்கு எதிரானது
மேலும் அணை பாதுகாப்பு மசோதாவானது தேசியக் குழு ஒன்றையும் வலியுறுத்துகிறது. இதன் மூலம் அணைகள் மீதான மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும். இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.
திருச்சி சிவா நோட்டீஸ்
தமிழகத்தில் நீண்டகாலமாகவே அணை பாதுகாப்பு மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி எதிர்ப்பு தொடருகிறது. அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியால் இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவில்லை. இம்மசோதாவை ராஜ்யசபா நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.
அதிமுக எதிர்ப்பு
இதனிடையே பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் அணை பாதுகாப்பு மசோதாவை நிச்சயம் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ராஜ்யசபா குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: அணை பாதுகாப்பு மசோதா முன்வைக்கிற தேசிய பாதுகாப்பு குழுவின் உத்தரவுகள்தான் அணைகள் தொடர்பான விவகாரத்தில் இறுதியானது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது. அணை பாதுகாப்பு மசோதாவின் பல அம்சங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆகையால் இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அணை பாதுகாப்பு மசோதாவால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது . இவ்வாறு அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார்.