இந்தியாவில் பரவும் 240 கொரோனா வகைகள்... பேரபாயத்தை ஏற்படும்... வல்லுநர்கள் எச்சரிக்கை
டெல்லி: நாட்டில் தற்போது 240 கொரோனா வகைகள் பரவுவதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதனால் பேரபாயம் ஏற்படும் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கிலும் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்புக் குழுக்களும் அந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
240 வகை கொரோனா
இந்தியா முழுவதும் 240 புதிய கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு வரமாகவே வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் மகாராஷ்டிராவின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் டாக்டர் ஷாஷாங்க் ஜோஷி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வகைகள் மற்றவற்றை விட வேகமாகப் பரவலாம் என்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹெர்ட் இம்மியூனிட்டி
நாடு முழுவதும் உள்ள மக்களிடையே ஹெர்ட் இம்மியூனிட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால், இந்தக் கருத்தைம முற்றிலுமாக மறுத்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நாட்டிலுள்ள மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 80% பேரின் உடலில் ஆன்ட்டிபாடிகள் இருந்தால் மட்டுமே ஹெர்ட் இம்மியூனிட்டியை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தப்பிக்கும் கொரோனா
அதேபோல இந்தியாவில் பரவும் இந்த கொரோனா வகைகள் இந்த ஹெர்ட் இம்மியூனிட்டியில் இருந்தும் தடுப்பூசியால் உருவாகும் ஆன்ட்டிபாடிகளிடம் தப்பிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சூழ்நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பரிசோதனைகள், தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிவது ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி பலனளிக்குமா
இந்தியாவில் பரவும் இந்த புதிய வகை கொரோனாக்களுக்கு எதிராகத் தடுப்பூசி பலனளிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "தடுப்பூசிகள் பலன் அளிக்கும். ஆனால் அவற்றின் செயல்திறன் குறையலாம். அதாவது தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்குத் தீவிர பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால் அவர்களுக்கு லேசான பதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார். இருப்பினும், நாட்டிலுள்ள அனைவரும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இந்தியாவில் சுகாதார ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 1.07 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.