கஞ்சா போதையில் கத்தியை விழுங்கிய இளைஞர் - கல்லீரலில் இருந்ததை ஆபரேசன் செய்த டாக்டர்கள்
கொரோனா லாக்டவுன் காலத்தில் சும்மா இருக்காமல் கத்தியை விழுங்கியிருக்கிறார் ஒருவர்.
டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் யார் யாருக்கோ என்னென்னமோ செய்ய தோன்றுகிறது. சிலர் சமைக்கிறார்கள், சிலர் கோலம் போடவும், உடை தைக்கவும் கூட கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சும்மா இருந்த ஒரு இளைஞரோ கத்தியை விழுங்கியிருக்கிறார். அந்த கத்தி நாளாக நாளாக தன் வேலையைக் காட்டவே அதை ஆபரேசன் செய்து எடுத்திருக்கிறார்கள் எய்ம்ஸ் டாக்டர்கள்.
கத்தியை விழுங்கிய அந்த நபர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். பல்வால் பகுதியில் வசித்து வரும் அவருக்கு மனநிலையும் சரியில்லையாம். கஞ்சா பழக்கமும் இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் போகவே, வீட்டில் சும்மா இருந்த அந்த நபர் கத்தியை எடுத்து விழுங்கியிருக்கிறார். வயிற்றுக்குள் போக மறுக்கவே தண்ணியும் குடித்து விழுங்கினார்.
அந்த கத்தி நேராக அவரின் கல்லீரலில் போய் சொருகி அங்கேயே தங்கி விட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த இளைஞரின் வயிறு வலிக்க ஆரம்பித்தது சாப்பாடு சரியாக சாப்பிட முடியவில்லை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு போனார் மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போகச்சொல்லி உள்ளூர் டாக்டர்கள் சொல்லவே, உடனே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போனார் அங்கே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கல்லீரலில் கத்தி குத்தியிருந்தால் வேற எப்படி ரியாக்ட் செய்வார்களாம் சரிதான் எப்படிப்பா கத்தி உள்ளே போச்சு என்று விசாரித்த போதுதான் கத்தியை தண்ணீர் குடித்து விழுங்கிய கதையை சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர்.
கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல்
20 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த கத்தி உடம்பிற்குள் இதயம், உணவுக்குழாய், சுவாசக்குழாய் என எந்த பகுதியையும் சேதப்படுத்தாமல் நேராக கல்லீரலில் குத்தி பதுங்கிக்கொண்டதுதான் அவர் செய்த அதிர்ஷ்டம். அப்புறம் என்ன ஐசியுவில் அவரை அட்மிட் செய்து 3 மணிநேரம் ஆபரேசன் செய்து கத்தியை அகற்றியிருக்கிறார்கள். ஒரு வாரம் சிகிச்சைக்குப் பிறகு இப்போதான் நார்மல் நிலைக்கு திரும்பியிருக்கிறார் அந்த இளைஞர். அது சரி இனி வீட்டிற்குப் போய் எதையும் விழுங்கி வைக்காமல் இருந்தால் சரிதான்.