அசத்தல் ஆய்வு.. இந்தியர்களிடம் அதிகரித்த ஆன்டிபாடி.. 3வது அலையிலிருந்து குழந்தைகள் தப்ப வாய்ப்பு
டெல்லி: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகளிடையே அதிக SARS-CoV-2 செரோ-பாசிட்டிவ் விகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பெரிதாக பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது இந்த ஆய்வு முடிவில் நமக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவலாகும்.
மொத்தம் 10,000 சாம்பிள்களை எடுத்துக் கொண்டு, ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, செரோ-பாசிட்டிவிட்டி விகிதம் குழந்தைகளிடையே அதிகமாக இருந்தது. செரோ-நேர்மறை என்பது வைரஸ் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான ஆன்டிபாடிகள் இருப்பதைக் குறிக்கிறது.
அந்த வகையில், குழந்தைகள் உடலில் ஆன்டிபாடிகள் அதிகம் இருக்கின்றன.
4,509 பங்கேற்பாளர்களின் டேட்டா தொகுக்கப்பட்டு இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. 700 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தனர். 3,809 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

மக்கள் நெரிசல்
தென் டெல்லியின் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள மீள்குடியேற்ற காலனிகளில் மக்கள் தொகை மிகவும் நெரிசலாக இருக்கும். அங்கு, அதிகப்படி 74.7 சதவீதம் என்ற அளவுக்கு செரோபிரெவலன்ஸ் இருந்தது என்று எய்ம்ஸ் சமூக ஆய்வு பேராசிரியர் மற்றும் கணக்கெடுப்பில் பங்கேற்ற டாக்டர் புனீத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு
இரண்டாவது அலையின்போது நாடு முழுக்க நகரப் பகுதிகளில் ஒரு இடம் விடாமல் கொரோனா பரவியது. எனவே அப்போது ஆன்டிபாடி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என கருதப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை வருவதற்கு முன்பே, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தெற்கு டெல்லியில் 73.9 சதவீத செரோபிரெவலன்ஸ் இருந்தது. இப்போது அது கூடியுள்ளது.

மூன்றாவது அலைக்கு எதிரான பாதுகாப்பு
டாக்டர் மிஸ்ரா மேலும் கூறுகையில், டெல்லி மற்றும் என்.சி.ஆர் (ஃபரிதாபாத்) ஆகியவற்றில் இரண்டாவது அலைக்குப் பிறகு அதிக செரோபிரெவலன்ஸ் உருவாகியிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அளவிலான செரோபிரீவலன்ஸ் எந்தவொரு 'மூன்றாம் அலை'க்கும் எதிராக பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

பள்ளிகளை திறக்கலாம்
"டெல்லியின் நெரிசலான நகர்ப்புறங்களில், குழந்தைகளுக்கு ஏற்கனவே அதிக செரோபிரெவலன்ஸ் இருப்பதால், பள்ளிகளைத் திறப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயம் கிடையாது. இரண்டாவது அலையின் போது, ஃபரிதாபாத்தின் என்.சி.ஆர் பகுதி (கிராமப்புற பகுதி) செரோபிரெவலன்ஸ் அதிகரித்துள்ளது. ஏனெனில் முந்தைய தேசிய ஆய்வில், இது 59.3 சதவீதம் (இரு வயதினருக்கும் கிட்டத்தட்ட சமம்) என்ற அளவில் இருந்தது. இப்போது மக்களிடையே ஆன்டிபாடி சக்தி அதிகரித்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video

ஆன்டிபாடி அதிகரிப்பு
இந்த ஆய்வில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் கிராமப்புறப் பகுதியில் 2-18 வயதுக்குட்பட்டவர்களில் 87.9 சதவீதம் செரோபிரெவலன்ஸ் இருக்கிறதாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது, 80.6 சதவீதமாக உள்ளது. எனவே சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் இருவருக்கும் ஆன்டிபாடி அதிகரித்துள்ளது. அதேநேரம், குழந்தைகளுக்கு இது அதிகம்தான். எனவே, மூன்றாவது அலையால் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட மாட்டார்கள். அதிலும், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது போன்ற பயம் தேவையில்லை என்பதை இநத் ஆய்வு காட்டுகிறது.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி
மிக முக்கியமாக, நகர்ப்புறங்களில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான அதிக வாய்ப்புகளும் இருக்கின்றது. அந்த நிலை வந்தால், எல்லோருக்கும், தடுப்பூசி கூட தேவைப்படாத நிலை வரலாம்.












Click it and Unblock the Notifications