வெடித்து கிளம்பிய பனாமா பேப்பர்ஸ் விவகாரம்.. ஐஸ்வர்யா ராயிடம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
டெல்லி: பனாமா பேப்பர்ஸ் வெளியான ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் பணம் பதுக்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக இன்று ஐஸ்வர்யாராய் ஆஜராகி விளக்கமளித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகியது. தொழிலதிபர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய், அவரது மாமனாரும் பாலிவு மெகாஸ்டாருமாகிய அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றன.
இந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை முடுக்கிவிட்டு நிலையில் , பனாமா ஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத் துறையும் 2017ஆம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் 2004ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பணம் அனுப்பியதற்கு விளக்கம் அளிக்குமாறு பச்சன் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஐஸ்வர்யாராய் கடந்த 15 ஆண்டுகளில் பெற்ற வெளிநாட்டுப் பணம் குறித்த பதிவேடுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சம்மன் அனுப்பபட்ட போது இரண்டு முறை கூடுதல் அவகாசம் கேட்டு ஐஸ்வர்யாராய் மனு செய்தார். இதையடுத்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐஸ்வர்யாராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது இதையடுத்து ஐஸ்வர்யாராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு
வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.