ஏ.கே. ஷர்மா, ஜிதின் பிரசாதா- அடுத்தடுத்து பிராமணர்களுக்குக் குறி.. உ.பி. தேர்தலில் பாஜக கணக்கு!
ஏ.கே. ஷர்மாவை தொடர்ந்து ஜிதின் பிரசாதா.. அடுத்தடுத்து பிராமணர்களுக்குக் குறி.. உ.பி. தேர்தலில் பாஜக கணக்கு!
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிராமணர்கள் வாக்குகளுக்கு குறிவைத்து அடுத்தடுத்த நகர்வுகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவை பாஜக இழுத்ததும் இதற்காகவே என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் 10% பேர் உள்ளனர். 1990களின் தொடக்கத்தில் இருந்தே பாஜகவின் வாக்கு வங்கியாக பிராமணர்களே இருந்து வருகின்றனர்.
ஆனால் 2017 சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது பாஜக. இது பிராமணர்கள் சமூகத்தை பெரும் அதிருப்தி அடைய வைத்தது. பொதுவாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர்களாக பிராமணர்களே தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதனை மாற்றியது பாஜக.
அதிருப்தியில் பிராமணரக்ள்
இதில் மிகுந்த அதிருப்தியில் இருந்த பிராமணரக்ள் இந்த குமுறலை டெல்லி பாஜக மேலிடத்துக்கும் தெரிவித்தனர். இதனை சரிகட்டும் விவதமாக உ.பி. மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணாவை பாஜக இழுத்துப் போட்டது. உ.பி. முன்னாள் முதல்வர் ஹெச்.என். பகுகுணாவின் மகள்தான் ரீட்டா. ஆனால் தொண்டர்கள் செல்வாக்கு இல்லாதவர் என்பதால் பாஜகவின் இந்த முயற்சி கை கொடுக்கவில்லை.
விகாஷ் துபே என்கவுண்ட்டர்
இதன்பின்னர் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த நிழல் உலக தாதா விகாஷ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நிழல் உலக தாதாவாகவே விகாஷ் துபே இருந்தபோதும், தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக அரசு படுகொலை செய்துவிட்டதாகவே கொந்தளித்தனர் பிராமணர்கள். அந்த சமூகத்தின் தொடர்ச்சியான இந்த அதிருப்தி அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்பது பாஜகவின் கவலை.
மாஜி ஐ.ஏ.எஸ். ஏ.கே.ஷர்மா
இதனால்தான் பிராமணர் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது. குஜராத்தில் பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே. ஷர்மாவை உ.பி. எம்.எல்.சி.யாக்கி களமிறக்கியதும் இதன் அடிப்படையில்தான்.. தற்போது மூத்த காங்கிரஸ் தலைவரான ஜிதின் பிரசாதாவை வளைத்துப் போட்டதும் உ.பி. பிராமணர்கள் வாக்குகளை குறிவைத்துதான் என்கினாறனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
காங். ஜிதின் பிரசாதா
காங்கிரஸில் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர். இதனால் ஜிதின் பிரசாதாவுக்கு உ.பி. காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜிதின் பிரசாதா மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் ஜிதின் பிரசாதா, பாஜகவுக்கு தாவி உள்ளார்.
பாஜகவுக்கு பலன் கிடைக்குமா?
ஏ.கே. ஷர்மா, ஜிதின் பிரசாதா என அடுத்தடுத்து பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பிராமணர் சமூகத்தின் அதிருப்தி குறையுமா? இல்லை ஏற்கனவே ரீட்டா பகுகுணாவை கொண்டு வந்து பயன்படாமல் போனதைப் போல ஆகிவிடுமா? என்கிற விவாதங்களும் பாஜகவில் நடந்து வருகின்றன. சட்டசபை தேர்தல் வரை பாஜகவின் இந்த திடீர் மனமாற்றப் போக்குகள் தொடரவே செய்யலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.