இனி டிஜிட்டல்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு.. பத்திரிக்கையாளர்களுக்கு நிம்மதி
டெல்லி: டெல்லி அரசின் பத்திரிகையாளர் சந்திப்புகள் அனைத்தும், டிஜிட்டல் முறையில்தான் நடைபெறும் என்று அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஊடகத்துறையில் பணியாற்றக்கூடிய நிருபர்கள், சம்பவ இடங்களுக்கு நேரடியாக சென்று செய்தி சேகரிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, உயரதிகாரிகள், முதல்வர் போன்றோர் பேட்டி அளிக்கும் போது, பல நிருபர்களும், கேமராமேனும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேட்டி எடுக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
கொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை?
அதில், அனைத்து பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பும் நமக்கு முக்கியம். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில், முன்னணியில் நிற்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிகையாளர்களை, பொருத்தளவில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இடங்களுக்கு செல்லக் கூடியவர்கள். இதை மனதில் வைத்து, இனிமேல் டெல்லி அரசின் செய்தியாளர் சந்திப்பு அனைத்தும் டிஜிட்டல் முறையில்தான் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Delhi Govt. press conferences will be conducted digitally now. It’s very important that all journalists, who are on the forefront of our battle against Corona, also protect themselves as they are in a high exposure environment.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 21, 2020
இதே போன்று அனைத்து மாநிலங்களும் டிஜிட்டல் முறையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது சிறப்பானதாக இருக்கும், டுவிட்டர் அல்லது யூ டியூப் மூலமாக நேரலையில் செய்தியாளர் சந்திப்பை அவர்கள் நடத்தலாம். செய்தியாளர்கள் தங்கள் கேள்விகளை இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.