அலிகார் பல்கலைக்கழக பேச்சுக்காக.. தேசத் துரோக வழக்கில் கைதான சர்ஜில் இமாமுக்கு ஜாமீன்
டெல்லி: தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சர்ஜில் இமாமுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது அவரது பேச்சு வன்முறையை தூண்டவில்லை, ஆயுதங்களை ஏந்துமாறு, அவர் தனது பேச்சின்போது அழைப்பு விடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
2020ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி குடிமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இமாம் நாட்டுக்கு எதிராக உரை நிகழ்த்தியதாக அலிகார் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து தேசத்துரோக குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
பிரிவுகள் 124A (தேசத்துரோகம்), 153A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், 10 மாதங்கள் கழித்து நவம்பர் 27ம் தேதி இமாமுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம்.
நீதிபதி சௌமித்ரா தயாள் சிங் அடங்கிய பெஞ்ச், தனது உத்தரவின்போது சரியான குற்றச்சாட்டை குறிப்பிடாமல் உள்ளது காவல்துறை. சர்ஜில் இமாம், ஆயுதம் ஏந்துமாறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை அல்லது அவரது பேச்சின் விளைவாக வன்முறையைத் தூண்டவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஜாமீன் மனுவை எதிர்த்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணீஷ் கோயல் வாதிட்டார். எஃப்ஐஆரின் உள்ளடக்கம், 124 ஏ, 153 ஏ மற்றும் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட ஐபிசியின் பிற பிரிவுகளின் கீழ் உள்ள குற்றங்களின் அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரிவித்து விடுவதை போல உள்ளது. எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
இந்திய அரசு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது வெறுப்புணர்வை பரப்பி, இரு சமூகத்தினரிடையே பகைமையையும் வெறுப்பையும் உருவாக்கி, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்த இமாம் மீது குற்றச்சாட்டு இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இமாம் மீது உத்தரபிரதேச காவல்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டாலும், வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவர் சிறையில்தான் உள்ளார்.