பட்ஜெட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் நலனுக்கு கூடுதல் நிதி- நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுதான் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசும் பிரதமர் மோடியும் பெரு முதலாளிகளுக்காக செயல்படவில்லை. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார்.
2 பேரால் 2 பேருக்கு ஆட்சி
2 பேரால் 2 பேருக்காக முந்தைய ஆட்சி நடத்தப்பட்டது. சாலையோர சிறு வணிகர்களுக்கு ரூ10,000 முதல் ரூ50 லட்சம் வரை ஓராண்டுக்கான மூலதனமாக மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இவர்கள் யாரும் கோடீஸ்வரர்கள் அல்ல.
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
2021-22-ல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ 73,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். அது உண்மை அல்ல.
சிறுபான்மையின் நலன் நிதி ஒதுக்கீடு
சிறுபான்மையினர் நலனுக்காக ரூ4,811 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 8.6% அதிகமான நிதி ஒதுக்கீடாகும். தலித்துகள் நலனுக்காக ரூ1,26,259 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ83,257 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பழங்குடியினர் நலனுக்காக ரூ79,942 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் பழங்குடியினர் நலனுக்கு ரூ53,653 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பொருளாதார சீர்திருத்தங்கள்
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.