ஆண்ட்ராய்டுக்கு போட்டி.. ஷார்ப்பாக களமிறங்கிய இந்தியாவின் "பாரத் ஓஎஸ்".. அசத்திய சென்னை ஐஐடி!
கூகுளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்க்கு மாற்றாக இந்தியா சார்பில் பாரத் ஓஎஸ்-ஐ உருவாக்கி சென்னை ஐஐடி அசத்தல். இந்த ஓஎஸ் இந்தியாவின் 100 கோடி மக்களும் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தகவல்
டெல்லி: கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஓஎஸ் போன்ற இயங்குதளங்கள் (OS) இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு மாற்றாக மத்திய அரசு பார் ஓஎஸ்-ஐ(பாரத் ஓஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி மற்றும் 'ஜெ அன்ட் கே' எனும் நிறுவனம் இணைந்து இந்த OS-ஐ உருவாக்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும் கூகுளுக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் மேலெழுந்து வந்திருக்கிறது. சமீபத்தில் கூட ஆன்டிராய்டு போன்கள் முறைகேடு மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை முறைகேடு குறித்து பிரச்னை எழுந்தது. இந்த பிரச்னையை விசாரித்த இந்திய தொழில் போட்டி ஆணையம் கூகுள் தரப்பில் தவறு இருக்கிறது என்றும் எனவே இதற்கு அபராதமாக ரூ.2,774 கோடியை கட்ட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் கூகுளின் இந்த ஆன்டிராய்டு OSக்கு பதில் வேறு ஒரு OS-ஐ உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த பணியைதான் சென்னை ஐஐடியும் 'ஜெ அன்ட் கே'(JandK) எனும் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்திருந்தது. இந்த முயற்சியின் பலனான புதிய OS வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னவ் ஆகியோர் பரிசோதித்து பார்த்துள்ளனர்.
வாவ்! உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
சிறப்பு அம்சங்கள்
இதில் பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது 'லினக்ஸ்'-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய் OSக்கும் பாரத் OSக்கும் இடையேயுள்ள வித்தியாசம் சுதந்திரம்தான் என்று சென்னை ஐஐடி கூறியுள்ளது. அதாவது இதனை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு தேவையான ஆப்ஸ்களை ப்ரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ் (PASS) எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்ஸ்களுக்கு பயனாளர்கள் தேவையான பர்மிஷன்களை கொடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆன்டிராய்டில் பயனாளர்கள் சிலவற்றிற்கு கட்டாயமாக பெர்மிஷன் கொடுத்தால்தான் அந்த ஆப் சேவையை பயன்படுத்த முடியும்.
பாதுகாப்பு
இதன் மூலம் தனிநபரின் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆன்டிராய்டு ஆப்களில் உள்ள சிறப்பம்சங்கள் இந்த PASS ஆப் ஸ்டோரிலிருந்து கிடைக்கும் ஆப்களிலும் இருக்கும் என்றும், இந்த ஆப்களும் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி கூறுகையில், "இது பயனாளர்களுக்கு நம்பகமான சேவைகளை மட்டுமே வழங்குகிறது. பயனாளர்கள் நம்பகத்தன்மையற்ற, அறிமுகமில்லாத ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
குறைபாடு
இந்த OS குறித்து இவ்வளவு நம்பிக்கையான தகவல்கள் சொல்லப்பட்டாலும் கூட தற்போது வரை இதனை எப்படி தரவிறக்கம் செய்வது என்பது குறித்து சொல்லப்படவில்லை. எனவே இது இனி வரும் மொபைல்களில் இன்-பில்டாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், மோட்ரோலா, விஓ, நோக்கியா, ஓப்போ போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் கூகுளுடன் ஒப்பந்தத்தில் இருப்பதால் அவைகள் அனைத்தும் ஆன்டிராய்டு OS-ஐ மட்டுமே வழங்குகின்றன. இந்நிலையில், இந்த புதிய OS-ஐ எந்த செல்போன் நிறுவனம் வெளியிடும் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
அச்சம்
அதேபோல இந்த OS-ஐ பொறுத்த அளவில் பயனர்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை வெளியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மூன்றாம் தர ஆப்களை (APK) பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில்தான் ரிஸ்க் இருக்கிறது. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் மால்வேர் வைரஸ்கள் இருப்பின் அது நம்முடைய அனைத்து தகவல்களையும் திருடிவிடும். எனவேதான் ஆப்பிளின் I-OS இதுபோன் APK பைல்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. கூகுள் இதனை தவிர்க்க தான் ப்ளே ஸ்டோரை கொண்டுள்ளது. இந்த ப்ளே ஸ்டோரிலும் சில ஆப்கள் மல்வேரை கொண்டிருப்பதால் கூகுள் அடிக்கடி இந்த ஆப்களை சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.