தலைநகருக்கும் பரவியதா பறவை காய்ச்சல்...கொத்து, கொத்தாக மடியும் காகங்கள்... மக்கள் பீதி!
டெல்லி : இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுளளதை உறுதிப்படுத்தியுள்ளன.
டெல்லியில் உள்ள மயூர் விஹார் பூங்காவில் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்தன. எனவே அங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
பறவை காய்ச்சல் அச்சுறுத்துதல்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுளளதை உறுதிப்படுத்தியுள்ளன.
தீவிர நடவடிக்கை
இந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான கோழிகளும், பறவைகளும் இறந்துள்ளன. மகாராஷ்டிராவிலும் ஏராளமான பறவைகள் இறந்துள்ளன. பறவை காய்ச்சல் நாடு முழுவதும் மேலும் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது.
டெல்லியிலும் பாதிப்பா?
இந்த கண்காணிப்பு குழுவினர் பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களின் அருகில் உள்ள மாநிலங்கள் இதனை தடுக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பூங்காவில் இன்று 15 முதல் 20-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன.
கண்காணிப்பு தீவிரம்
கடந்த வாரத்தில் மட்டும் அங்கு இதுவரை 200 காகங்கள் இறந்துள்ளன. இதனால் டெல்லியிலும் பறவை காய்ச்சல் பரவிய பீதி ஏற்பட்டுள்ளது. இந்த காகங்கள் பறவை காய்ச்சலால் காரணமாக இறந்தனவா? என்பதை அறிய அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால் டெல்லி முழுவதும் கோழி பண்ணைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் அதனை சார்ந்த இடங்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
900 கோழிகள் உயிரிழப்பு
இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 900 கோழிகள் இறந்துள்ளன. இறந்த கோழிகளின் மாதிரிகளை ஆய்வகத்திற்காக அனுப்பி உள்ளதாகவும், அது வந்த பிறகுதான் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும் என அதிகாரிகள் கூறினர்.