கொரோனா புதிய உச்சம்.. மீண்டும் ஊரடங்கு? ரயில் நிலையங்களில் அலைமோதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற அச்சத்தில் மகாராஷ்டிராவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றாததும், மரபணு மாறிய வைரஸ் பரவலும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி!
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தற்போது நாட்டிலுள்ள சரிபாதிக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மகாராஷ்டிராவில் மட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் அதிகரிப்பு
இதனால் எங்கு மீண்டும் தேசிய அளவிலான முழு லாக்டவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவைவிட்டு வெளியேறிவருகின்றனர். தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
80 ஆயிரம் பேர்
ரயில்களில் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் ரயில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இல்லை என ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. மும்பை, புனே என அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதுவரை 45 ரயில்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இப்போது செல்வதுதான் நல்லது
இது குறித்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், மும்பையில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இப்போது கையில் கொஞ்சம் பணம் உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவிடுவதுதான் நல்லது. இங்கு மருத்துவ வசதிகளும் போதுமானதாக இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மந்தமாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாகத் தான் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்,
Recommended Video
மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் தாக்கரே அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், தற்போது மகாராஷ்டிராவில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வார இறுதி நாட்களிலும் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில கஷ்டமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.