கொரோனா நோயாளிகளை குறி வைத்து தாக்கும் காசநோய்.. மத்திய அரசு பிறப்பித்த பரபரப்பு உத்தரவு.. முழு தகவல்
டெல்லி: கொரோனா நோயாளிகள் மத்தியில் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் காசநோய் சோதனை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு சில வாரங்களாக 50 ஆயிரத்திற்கும் கீழாக உள்ளது.
அதேநேரம் கொரோனா நோயாளிகளுக்கு வேறு சில இணை நோய்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
கொரோனா 2ஆம் அலைக்கு பிறகும்.. கெத்து குறையாத யோகி ஆதித்யநாத்.. 42% உபி மக்கள் ஆதரவு..சிவோட்டர் சர்வே
காசநோய் சோதனை
இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் மத்தியில் TB எனப்படும் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக பரவலாக தகவல் வெளியானது.. இந்தச் சூழ்நிலையில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காசநோய் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்குக் காசநோய் எந்தளவு ஏற்படுகிறது என்பதைக் கண்காணித்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனைத்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளன. மேலும், கொரோனா நோயாளிகளுக்குக் காசநோய் சோதனை நடத்த வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உறுதியான தகவல் இல்லை
அதேநேரம் கொரோனா பரவல் காரணமாகக் காசநோய் அதிகரித்துள்ளது என்பதை உறுதி செய்ய போதிய சான்றுகள் இல்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் காசநோய் பாதிப்பு 25% வரை குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நுரையீரல் தாக்கும்
காசநோய் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக் கூடிய தொற்றுநோயாகும். இவை இரண்டும் நுரையீரலைக் குறிவைத்துத் தாக்கும் தன்மை கொண்டவை. இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒத்த அறிகுறிகளையே கொண்டவை. இருப்பினும், காசநோய் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு ஒருவரது உடலில் இருக்கும்.
பிந்தைய பாதிப்பு
அதேநேரம் காசநோய் பாதிப்பு கருப்பு பூஞ்சை போல கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பாக ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை சமயத்தில் அளிக்கப்படும் ஸ்டீராய்டுகள் காரணமாக அவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். அந்த நேரத்தில் கருப்பு பூஞ்சை மனிதர்களைத் தாக்கி வந்தது. இதேபோல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, காசநோயும் தாக்கலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.