அன்புமணி இனிமேல் பாமக தலைவர் என கூற முடியாது.. எங்களுக்கு வெற்றி.. டெல்லியில் ஜிகே மணி பேச்சு
டெல்லி: அன்புமணி இனிமேல் பாமக தலைவர் என கூற முடியாது என டெல்லியில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அன்புமணி தலைவர் என்று சொல்லி போலியான ஆவணத்தை கொடுத்தது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது என்றும், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.
பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. பாமக கட்சியின் தலைவர் நான் தான் என அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு, பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தது. இதனால் ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு அன்புமணி ஆட்டம்போடுவதாக கூறினார்.

தொடர்ந்து தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சிவில் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜிகே மணி கூறியதாவது:-
ராமதாஸ் சார்பில் பாமக இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீதி வேண்டும், நியாயம் வேண்டும், தேர்தல் ஆணையமே ஜனநாயகத்தை படுகொலை செய்யாது, அன்புமணிக்கு துணை போகாது என்று போராட்டம் நடத்துவதற்காக இங்கு வந்திருக்கிறோம்.
இதேபோல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தோம். இந்த வழக்கு விசாரணையும் இன்று வந்தது. இதில் நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், மருத்துவர் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்லி போலியாக ஆவணம் கொடுத்தது செல்லாது ரத்து செய்யப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இது ராமதாஸுக்கு கிடைத்த வெற்றி. மிகப்பெரிய வெற்றி.
தேர்தல் ஆணையமும் கொடுத்த உத்தரவினை திரும்பப் பெற்றுக்கொண்டது. அன்புமணி 2022 ஆம் ஆண்டு பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு வரை தான். ஆனால் அன்புமணி தான் 2023 ஆம் ஆண்டில் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலி ஆவணம் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு, தேர்தல் ஆணையம் துணையோடு 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தலைவர் பதவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனை நாங்கள் மறுத்து கூறினோம். செல்லாது என்று சொன்னோம். அப்போது தேர்தல் ஆணையமும், அன்புமணி கொடுத்த ஆவணங்களை வைத்து அவரை தலைவர் என்று சொன்னோம். இப்போது அதை திரும்பப் பெறுகிறோம் என்று சொல்லிவிட்டது. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி..
இதனால் இனி பாமக தலைவர் என்று அன்புமணி சொல்ல முடியாது. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கொடுத்து கடிதம் கொடுத்து இருந்தது. இப்போது அதையும் முடக்கி வைத்து விட்டது. பாமகவில் யார் தலைவர் என்பதை சிவில் நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்று சொல்லிவிட்டது. என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications