291 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து.. தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அதிரடியாக பதவி நீக்கம்!
டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, தற்போது அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12841 எனும் எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. சான்ட்ராக்சி, காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்த இந்த ரயில் பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. அதுபோல பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு ரயிலும் பல்சோர் ரயில் நிலையத்தை கடக்கவில்லை. ஓரிரு மணி நேரம் ஆகியும் இந்த ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடையாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் லோகோ பைலட்டிடம் தொடர்புகொள்ளப்பட்டது.
ஆனால் பதில் ஏதும் இல்லை. எனவே ரோந்து சென்று பார்த்தபோதுதான் ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியிருந்தன. உடனடியாக மீட்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் சென்று பார்வையிட்டார்.
மீட்பு பணிகள் முடிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. மறுபுறம் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது. சில உடல்களில் முகம், தலை போன்றவை முற்றிலுமாக சிதைந்து இருந்ததால் அந்த உடல்கள் யாருடையது என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து காணாமல் போனதாக புகார் அளித்தோரின் டிஎன்ஏவையும், உயிரிழந்தவர்களின் டிஎன்ஏவும் பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
இருப்பினும் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களில் இன்னும் 52 உடல்கள் யாருடையது என்பதை அடையாளம் காண முடியவில்லை. இந்த உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, தற்போது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை அமைச்சரவையின் நியமனக் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் விபத்திற்கு காரணம், போதுமான அளவு நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படாததுதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ரயில்வே பணியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications