சோனுசூட்டிடம் உதவி கோரிய ராணுவ அதிகாரி...கொரோனா சிகிச்சை கருவிகளைக் அளிக்க கேட்டு கடிதம்
பிரபல நடிகர் சோனு சூட்டிடம் ராணுவ உயரதிகாரி ஒருவர் உதவி கோரி கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. இது ராணுவத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு உதவி கோரி பாலிவுட் நடிகர் சோனுசூட்டிற்கு ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. அதீத ஆர்வத்தில் அந்த அதிகாரி கடிதம் எழுதி விட்டதாக இந்திய ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வில்லன் நடிகர் என்றாலும் இவரின் செயல்களால் நிஜ ஹீரோ என்று மக்களால் போற்றப்பட்டு வருகிறார். பொதுவாகவே உதவும் குணம் கொண்ட சோனு சூட், கொரோனா காலத்தில் பலருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு பண உதவிகள் மட்டுமல்லாமல், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.
கடந்த ஊரடங்கின்போது பொது முடக்கத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட போது அவர்களுக்கு எல்லாம் வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்து நிம்மதி வர வைத்தார். வெளிநாடுகளில் தவித்த மருத்துவ மாணவர்களுக்கும் தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்களை தமிழ்நாடு திரும்ப வைத்தார்.

உதவி செய்யும் நடிகர்
ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி, கொரோனா மருத்துவ சிகிச்சை வசதிக்கான உபகரணங்களை வாங்குவதற்கு உதவி கோரி, ஜெய்சால்மரில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு ராணுவ பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி சோனு சூத் எழுதிய கடிதம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது ராணுவத் தலைமையை கோபமடையச் செய்துள்ளது.

உதவி கோரிய ராணுவ அதிகாரி
மே 13 தேதியிட்ட ஒரு கடிதத்தில், ஜெய்சால்மர் ராணுவ நிலையத்தில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மைய வசதியை அமைத்து வருகிறது. அந்த சிகிச்சை மையத்திற்கு நான்கு ஐ.சி.யூ படுக்கைகள், பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பத்து ஜம்போ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஒரு எக்ஸ்-ரே இயந்திரம் மற்றும் இரண்டு 15 கே.வி.ஏ ஜெனரேட்டர் செட் உள்ளிட்ட சில உபகரணங்களை வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று சோனு சூட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நினைவில் வைக்கப்படும்
சமூக பொறுப்புணர்வு கொண்ட தாங்கள் இந்த உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் அவரது தாராளமான செயல் என்றென்றும் நினைவில் வைக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மூத்த அதிகாரி இந்த கடிதத்தை உறுதிபடுத்தியுள்ளார். அது அதிக ஆர்வக்கோளாறு காரணமாக எழுதப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ராணுவம் தனது சொந்த பணத்தில் இருந்து நாடு முழுவதும் பல கோவிட் மருத்துவமனைகளை அமைத்துள்ளது. ராஜஸ்தானில், ஸ்ரீ கங்கநகரில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு இன்று செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

சோனுசூட்டிற்கு பாலபிஷேகம்
சோனு சூட்டின் மனிதாபிமானத்தை போற்றும் வகையில் அவருக்கு கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இரண்டாவது அலையிலும் அவரது மனிதாபிமானம் தொடர்கிறது. இதனால் அவரின் மனித நேயத்தை போற்றும் வகையில் ஆந்திராவில் சித்தூரில் சோனுவுக்கு மிகப் பெரிய கட்-அவுட் வைத்து அதற்கு பெரிய மாலை போட்டு பொதுமக்கள் குடம் குடமாக பால் ஊற்றி வழிபட்டனர். இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் உதவி கேட்டு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications