இதுவரை 277 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது.. பாஜகவை விட்டு விளாசும் கெஜ்ரிவால்!
டெல்லி: ''பல மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக தற்போது, டெல்லி பக்கம் திரும்பியுள்ளது என்றும் சமீபத்திய ஆண்டுகளில் பாஜக 277 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது என்றும்'' டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெர்ஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. நடப்பு ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த கட்சி தனது கவனத்தை அடுத்ததாக குஜராத் பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த சில வாரங்களாக குஜராத் சென்று வரும் கெஜ்ரிவால் அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இலவசங்களுக்கு எதிரான வழக்கு-3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் உத்தரவு
ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.20 கோடி
பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி தெளித்து வரும் கெஜ்ரிவால், குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு கடும் சவால் அளிப்பார் என்று அரசியல் நோக்கர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தசூழலில், டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், ஆம் ஆத்மியின் 40 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்து, அதற்காக ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.20 கோடி வீதம் தர பா.ஜ.க. தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி அரசை கவிழ்க்க சதி
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, டெல்லியில் இன்று சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பல மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக தற்போது, டெல்லி பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பாஜக 277 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது. பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த குஜராத்தில் அக்கட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி
இதனால், எங்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை ஏவி விடப்படுகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பயன்படுத்துகிறது. எந்த ஒரு எம்.எல்.ஏவும் எங்களுக்கு எதிராக இல்லை என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் நான் தயாராக இருக்கிறேன். மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம், பீகார், அருணாசல பிரதேசம், மகராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்த பாஜக தற்போது டெல்லி அரசை கவிழ்க்க சுயநலத்துடன் முயற்சிக்கிறது'' என்றார்.
பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை
முன்னதாக சட்டமன்றத்தில் பேசிய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ''இன்னும் ஆயிரம் ரெய்டுகளை வேண்டுமானாலும் நடத்தி கொள்ளுங்கள். ஆனால் என்னிடம் இருந்து உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. டெல்லியில் கல்வி முன்னேற்றத்திற்காக நான் உழைத்து வருகிறேன். நான் செய்து வரும் குற்றம் இதுதான். எங்களின் சிறப்பான பணிகளை உலக நாடுகள் பாராட்டுவதை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை'' என்றார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
டெல்லி சட்டப்பேரவை இன்று கூடியதும் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலில் 10 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமளி நீடித்ததால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சட்டமன்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.