'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று நடத்திய பிரமாண்டமான பேரணியின் முடிவில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரை சரியான நேரத்தில் அந்த இடத்தை அடையத் தவறியதால் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். எனவே நாளை சரியான நேரத்திற்கு சென்று முதல்வர் கெஜ்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அலுவலகம்
புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அடைந்திருக்க வேண்டும். அங்கு ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 3 மணிக்குள் அவர் நடத்திய பிரம்மாண்ட வாகன பேரணி நிறைவடையவில்லை சரியான நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனால் தான் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
உற்சாக வரவேற்பு
இதனிடையே பேரணியின் போது சாலையின் இருபுறமும் இருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரம்மாண்ட முழக்கங்களை எழுப்பி கெஜ்ரிவாலை வரவேற்றனர். அவர்களை பார்த்து கெஜ்ரிவால் கையசைத்து நன்றி தெரிவித்தார். முதல் ஐந்து வருடம் சூப்பர். உங்கள் ஆட்சி அடுத்தும் தொடர வேண்டும் என்று அவர்கள் ஆவேச முழக்கமிட்டனர்.
பாஜக 3 இடங்கள்
2015 ஆம் ஆண்டில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 சட்டசபை இடங்களில் 67 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்று அதிர வைத்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அப்போது ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 54.3 சதவீதமாக இருந்தது.
நம்பிக்கை
இந்த முறையும் ஒட்டுமொத்தமாக 70 இடங்களிலும் வெல்லும் நம்பிக்கையுடன், ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கி உள்ளது. 46 சிட்டிங் எம்.எல்.ஏக்களையும் 24 புதிய முகங்களையும் ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது.