இந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் தடுப்பூசியா.. மத்திய அரசு சொல்வது சாத்தியமில்லாதது-மருத்துவ நிபுணர்கள்
டெல்லி: அடுத்த 5 மாதங்களில் 2 பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
தற்போது நமது நாட்டில், நாளொன்றுக்கு வெறும் 2.3 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிரது. அரசு இப்போது 2 பில்லியன் தடுப்பூசி என வாக்குறுதி அளித்துள்ளதை வைத்து பார்த்தால், ஆகஸ்ட்-டிசம்பர் மாதங்களுக்கு முன்பாக, உற்பத்தியை 6 மடங்கு உயர்த்தியாக வேண்டும்.
தேசிய கோவிட் பணிக்குழுவின் தலைவர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால், அளித்த பேட்டியொன்றில், ஆகஸ்ட்-டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டில் 2.16 பில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் போவதாகவும், இது கிட்டத்தட்ட 95 கோடி மக்கள் தொகையை ஈடுகட்ட போதுமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
அரசு கூறும் தகவல்படி, 75 கோடி டோஸ் கோவிஷீல்ட், 55 கோடி டோஸ் கோவாக்சின் மற்றும் 15.6 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி ஆகியவை கிடைக்க வேண்டும்.
அரசு மேலும் சில தடுப்பூசிகளையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது. பயோஇ என்ற நிறுவனத்தின் 30 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி, 5 கோடி டோஸ் சைடஸ் காடிலா நிறுவன தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா-நோவாவாக்ஸின் 20 கோடி டோஸ், பாரத் பயோடெக்-வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மூக்கு வழியான தடுப்பூசி 10 கோடி டோஸ் மற்றும் ஜென்னோவா நிறுவனத்தின் 6 கோடி டோஸ் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன.
ஆனால், உற்பத்தியை இவ்வளவு விரைவாக எவ்வாறு அதிகரிக்க முடியும்? என்று மருத்துவ நிபுணர்கள் கேட்கிறார்கள்.
இந்தியாவில் அறிமுகமானது ஸ்புட்னிக் வி தடுப்பூசி.. எப்போது கிடைக்கும்.. விலை என்ன.. விவரம்!
"இது லட்சிய இலக்கு, இதை அடைந்தால் நான் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவேன். ஆனால் அது எப்படி நடக்கும் என்று இப்போது எனக்குத் தெரியும்" என்று நுண்ணுயிரியலாளரும் நோயெதிர்ப்பு நிபுணருமான சுதான்ஷு வ்ரதி கூறினார்.
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸின் பொருளாதார வல்லுனர் ராமகுமார் கூறுகையில், கோவிஷீல்ட் உற்பத்தியை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்த்தினால்தான் அரசு எதிர்பார்க்கும் டோஸை வழங்க முடியும்.
ஜூலை மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 3.3 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் சப்ளை செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவே தடுமாறி வருகிறது சீரம் நிறுவனம். டிசம்பர் மாதத்திற்குள் அவர்கள் ஒரு நாளைக்கு 6.4 மில்லியன் டோஸ் எவ்வாறு தயாரிக்கப் போகிறார்கள்? "என்று கேள்வி எழுப்புகிறார்.
5 மாதங்களில் 55 கோடி டோஸ் கோவாக்சின் இலக்கை அடைய, நாளொன்றுக்கு 3.7 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யப்பட வேண்டும். தடுப்பூசி தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத BIBCOL என்ற நிறுவனமும் அரசு பட்டியலில் உள்ளது. இது தடுப்பூசியை தயாரிக்கவே, 6 மாதங்கள் ஆகலாம்.
ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளின் வாக்குறுதி சாத்தியம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு தருவதற்கு முன்பாக, அரசு மருந்து உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே இந்த வாக்குறுதி இப்போதைக்கு உள்ள மக்களின் கோபத்தை தணிக்க வேண்டுமானால் உதவுமே தவிர யதார்த்தத்தில் அவ்வளவு தடுப்பூசிகள் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.