அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்! இமாச்சலில் ஆம் ஆத்மிக்கு பெரிய அடி..பாஜகவில் இணைந்த பெருந்தலைகள்
டெல்லி: இமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்தி வரும் நிலையில் அதன் மாநில தலைவர் உள்ளிட்ட பெருந்தலைகள் திடீரென்று பாஜகவில் இணைந்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அந்த கட்சி பஞ்சாப்பில் அமோக வெற்றி பெற்றது.
பஞ்சாப்பில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அங்கு ஆம் ஆத்மி அரியணையில் அமர்ந்தது. பகவந்த் மான் முதல்வராக உள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி அக்கட்சியினருக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆம் ஆத்மி உற்சாகம்
கட்சி துவங்கிய 10 ஆண்டுகளுக்குள் 2வது மாநிலத்தில் ஆட்சியை பிடித்து இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் பிற மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குஜராத், இமாச்சல பிரதேசம், ஹரியானா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இமாச்சலில் தீவிர தேர்தல் பணி
குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. இங்கு மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணியை ஆம் ஆத்மி துவக்கியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதார வசதி செய்து கொடுக்கப்படும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வம்
மேலும் இமாச்சலில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இமாச்சல பிரதேசம் மாண்டியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். இதற்கு அம்மாநில மக்களிடம் ஆதரவு இருந்தது. இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பாஜகவில் இணைந்த தலைவர்கள்
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தின் ஆம் ஆத்மி மாநில தலைவர் அனுப் கேசரி பொது செயலாளர் சதீஷ் தாகூர், உன்னா மாவட்ட தலைவர் இக்பால் சிங் உள்ளிட்டவர்கள் டெல்லியில் வைத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர். இவர்கள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன் தொடர்பில் இருந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறியுள்னர்.

பின்னடைவு
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி இந்த மாதம் 12 தேதி 4 நாள் பயணமாக ஜேபி நட்டா இமாச்சல பிரதேசம் செல்ல உள்ள நிலையில் ஆம் ஆத்மி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications