கன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.. இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்த பாஜக
டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்துள்ளது பாஜக மேலிடம்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பாஜக தலைவர்கள் பலரும் அவ்வப்போது தமிழ் மொழியின் சிறப்பை பேசுகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் அவ்வையார், பாரதியார் பாடல்களை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிர்மலா சீதாராமன் தம்முடைய பட்ஜெட் உரையில் திருக்குறளை தவறாமல் மேற்கோள் காட்டுவார். தம்மால் தமிழ் படிக்க முடியவில்லையே என தமிழக பிரசார கூட்டத்தில் ஆதங்கப்பட்டார் அமித்ஷா.
இந்தியில் கடிதம்
அதேநேரத்தில் மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்புவோம் என அடம்பிடிக்கின்றனர். இதற்கு அண்மையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியில் தமக்கு வந்த கடிதத்தை திருப்பியும் அனுப்பினார் வெங்கடேசன்.
இந்தியில் வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுவார் என பாஜக மேலிடம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அறிக்கை முழுவதும் இந்தியில்தான் இருக்கிறது. இந்தியில் என்ன இருக்கிறது என்பது இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர்களுக்கு தெரியாது.
ஆங்கிலத்திலும்..
அதேநேரத்தில் கவனமாக தங்களை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மாநிலம், தொகுதி, வேட்பாளர் பெயரை மட்டும் ஆங்கிலத்தில் இடம்பெற செய்திருக்கின்றனர். ஏற்கனவே பாஜக மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனை சமாளிக்கத்தான் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழ் மொழி, தமிழர் கலாசார பெருமை பற்றி எல்லாம் அடிக்கடி பேசுகின்றனர்.
தமிழில் வெளியாகுமா?
தற்போது தேர்தல் காலம்.. இதற்கான வேட்பாளர் அறிவிப்பையாவது பாஜக தமிழில் வெளியிட்டிருக்கலாம். அதிமுகவிடம் தொகுதிகளை அடித்து பறிப்பதில் கவனமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர்கள் இதை எல்லாம் மேலிடத்துக்கு சொல்லி இருந்தால் அவர்களின் தமிழ் மொழி பற்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான 20 தொகுதி வேட்பாளர்களையாவது தமிழில் பாஜக அறிவிக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.