இலவசங்கள் பற்றி விமர்சித்த மோடி.. கிண்டல் செய்த கெஜ்ரிவால்.. விடாமல் கட்டம் கட்டிய பாஜக தலைகள்
டெல்லி: இலவசங்கள் குறித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு பாஜக கடுமையான விமசர்சனங்களை தெரிவித்துள்ளது.
சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிக்கும் என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.

ஆனால் இலவசங்களை ஒழிப்போம் என்பது சாமானிய மக்களுக்கு எதிரான அறிவிப்பு என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பதில் கூறியிருந்தார். இதனையடுத்து பாஜக தற்போது கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, பானிபட்டில் உள்ள 2ஜி எத்தனால் ஆலையை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், "அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதுபோன்ற நடவடிக்கைகள் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும்" என கூறியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு மேலெழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "இலவசங்கள் என்று பாஜக அழைக்கும் தனது அரசாங்கத்தின் திட்டங்கள் மக்கள் வறுமையில் இருந்து வெளியே வர உதவியுள்ளது. மேலும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற தரமான சேவைகள் ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட உள்ளோம். ஆனால் தற்போது ஏழை மக்களின் உணவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடுமையான செயல்" என்று பிரதமரின் கூற்றுக்கு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தற்போது முழுபலத்தை பயன்படுத்தி கெஜ்ரிவாலுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இது குறித்து பாஜக தலைவரில் ஒருவரான அமித் மாளவியா கூறுகையில், "கடந்த 70-75 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றை பல்வேறு அரசுகள் அளித்து வருகின்றன. இந்த பெருமையை கெஜ்ரிவால் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது" என்று கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் "விளம்பரங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடற்ற செலவு செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.
"குறிப்பிட்ட ஊடகங்களுடன் இணைந்து கச்சிதமாக அவர் விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறார். மட்டுமல்லாது இலவசங்கள் குறித்த கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளார். இவர் விளம்பரங்களுக்கு மட்டுமே அதீதமாக செலவு செய்கிறார். ஊடகங்கள் இவரின் செயல்களை அம்பலப்படுத்தாது என தெரிந்த பின்னர் அப்பட்டமாக பொய் கூறுகிறார்" என்றும் சிங் விமர்சித்துள்ளார். அதேபோல, "கெஜ்ரிவால் ஒரு பொய்யர். அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்" என்றும் டெல்லி பாஜக முன்னாள் தலைவர் மனோஜ் திவாரியும் குற்றம் சாட்டியுள்ளார்.
"அவரை தொடர்ந்து பொய்களை மட்டுமே சொல்லி வருகிறார். பல முறை அவர் கூறிய வாக்குறுதிகளிலிருந்து பின் வாங்கியுள்ளார். அதேபோல பலமுறை தனது அறிக்கைக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து இவ்வாறு பொய்களை கூறி வருகிறார்" என்றும் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமை "தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதும், வாக்குறுதி அளிப்பதும் தீவிரமான பிரச்னை" என்றும், "உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கு அதிக தொகை செலவிட வேண்டும்" என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாஜக எம்பி கேஜே அல்போன்ஸ் "ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற மோடி அரசு பணத்தை செலவிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.மேலும், "மோடி அரசு செலவழித்த பணத்தில் பெரும்பாலானவை ஏழைகளுக்கான உள்கட்டமைப்பு, வீடுகள் முதல் கழிப்பறைகள், குடிநீர், காப்பீடு, மருத்துவம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தப்பட்டுள்ளன" என்றும் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"பணம் எங்கே போகிறது என கெஜ்ரிவால் கேட்கிறார். அது சத்யேந்தர் ஜெயின் வீட்டுக்கு போகவில்லை. அது 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக செலவழிக்கப்படுகிறது. தடுப்பூசி வழங்க செலவழிக்கப்படுகிறது" என கவுரவ் பாட்டியா கூறியுள்ளார். இந்த விமர்சனங்கள் மூலம் பாஜக-ஆம் ஆத்மி இடையே பெரும் கருத்து மோதல்கள் வெடித்து கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications