பன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா
டெல்லி:பன்றிக்காய்ச்சலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டுவந்த நிலையில், கடந்த 16ம் தேதி அமித்ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனை இயக்குநர் ரன்வீர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது.
சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அமித்ஷா, இன்று வீடு திரும்பினார். இருப்பினும், அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷாவை காங்கிரஸ் எம்.பி.யும், காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான பிகே ஹரிபிரசாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் கர்நாடகத்துக்குத் திரும்பிவிட்டதால், பாஜக தலைவர் அமித் ஷா பயந்துவிட்டார். மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை சரியாகிவிட்டதால், பயத்தில் அமித் ஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த பாஜக.. அவர் நாகரீக சமுதாயத்தில் வாழத்தகுதியற்றவர் என்று தெரிவித்திருந்தது.