பிரதமரின் பிம்பத்தைக் கெடுக்க 'கொரோனா டூல்கிட்'.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு... காங்கிரஸ் மறுப்பு
டெல்லி: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி பிரதமர் மோடியின் பிம்பத்தைக் கெடுக்க காங்கிரஸ் தனியாக ஒரு டூல்கிட்-ஐ உருவாக்கியுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதைக் காங்கிரஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் இப்போது பரவி வரும் கொரோனா வைரசின் 2ஆம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. முதல் அலையுடன் ஒப்பிடுகையில் 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 4,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம்
|
பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா 2ஆம் அலை ஏற்படுவதை மத்திய அரசு தடுக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இந்நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழைக் கெடுக்கக் காங்கிரஸ் தனியாகவே ஒரு டூல்கிட்-ஐ உருவாக்கி உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவின் நற்பெயரை வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து கெடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் டூல்கிட்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பு பத்திரிக்கையான ஆர்கனைசர் பத்திரிக்கையில், காங்கிரஸின் கொரோனா டூல்கிட் என முதலில் இது வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும், அந்த டூல்கிட்டில், காங்கிரஸ் கட்சியினர் 'இந்தியா வகை கொரோனா', 'மோடி வகை கொரோனா' போன்ற வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா
அதேபோல பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். மேலும், பாஜவின் இந்துத்துவ அரசியலைத் தொடர்ந்து விமர்சிக்கும் வகையில், ''சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா'' என்ற வாசகத்தைக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜே பி நட்டா
இந்த டூல்கிட்டை பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, "சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, ஒரு தரப்பினருக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்புவதில் காங்கிரஸ் கைதேர்ந்தவர்கள். இது இந்தியர்களுக்கு நன்றாகவே தெரியும். நாடு தற்போது கொரோனாவுடன் போராடி வருகிறது. எனவே, காங்கிரஸ், ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என விமர்சித்துள்ளார்.
|
காங்கிரஸ் மறுப்பு
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. தவறான முறையில் கொரோனாவை கையாண்டதைத் திசைதிருப்ப இதுபோன்ற போலி பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளதாகக் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஜே பி நட்டா, சம்பித் பத்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அக்கட்சியின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பொய்களைப் பரப்புவதில் நேரத்தை வீணாக்காமல் உயிரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.