சிக்கிட்டாங்க! ஆன்லைனில் "அந்த" மாதிரி படம் பார்த்த, ஷேர் செய்தவர்களுக்கு சிக்கல்! வலை வீசும் போலீஸ்
டெல்லி: சிறார் ஆபாசப் படங்களை ஆன்லைனில் பதிவிட்ட மற்றும் ஷேர் செய்தோரை பிடிக்க 20 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு எதிரான வன்முறையும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குழந்தைகள் கூட இந்த பாலியல் குற்றங்களுக்கு இரையாகி வருகின்றன.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி, சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச வீடியோக்கள் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், சிறார் ஆபாச வீடியோக்களும் இணையதளத்தில் அதிக அளவில் புழங்கி வந்தன. 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வைத்து எடுக்கப்படும் இதுபோன்ற ஆபாசப் படங்களுக்கு உலகம் முழுவதும் பெருமளவில் 'டிமாண்ட்' இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய, மாநில அரசுகள் பல முக்கிய ஆபாச வலைதளங்களுக்கு தடை விதித்தன. குறிப்பாக, சிறார் ஆபாச வலைதளங்கள் அதிக அளவில் முடக்கப்பட்டன. மேலும், சிறார் ஆபாசப் படங்களை ஆன்லைனில் பதிவிடுபவர்கள், பார்ப்பவர்கள், அதை பகிர்பவர்கள் என அனைவரின் மீதும் காவல்துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கார்பன்' எனப் பெயரிடப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படும் வருகின்றனர். தமிழகத்தில் கூட கடந்த காலங்களில் பல இடங்களில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த சிறார்களின் ஆபாசப் படங்கள் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக இன்டர்போலின் (சர்வதேச காவல்துறை) நியூசிலாந்து பிரிவு சிபிஐக்கு தகவல் அளித்தது.
இதன்பேரில், இந்த ஆபாசப் படங்களை எடுத்தவர்கள், அதை ஆன்லைனில் பதிவிட்டர்கள், அதை ஷேர் செய்தவர்கள் ஆகியோரை பிடிக்க டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, கேரளா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் மெகா சக்ரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷனின் கீழ் நாடு முழுவதும் பலர் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications