நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.7ஆம் தேதி தொடக்கம்.. முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலம் குறித்த முறையான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டு உள்ளார்.
நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் நவ. மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். இந்தாண்டு இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக இது சற்றே தாமதமானது.
பெரிய மூவ்.. சீனில் வரும் கமல்.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி.. சென்னையில் மநீம ஆலோசனை! வியூகம்
குளிர்காலக் கூட்டத்தொடர்
இதற்கிடையே இந்தாண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிச. முதல் வாரம் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்தாண்டு குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிச. 7ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்போது
டிச. 7 முதல் டிச.29 வரை குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நாடாளுமன்றத்தின் 2022 குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை 23 நாட்களில் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும். அமர்வின் போது சட்டமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்நோக்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய மசோதாக்கள்
அமர்வின் முதல் நாள் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முலாயம் சிங் யாதவ் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. இரண்டாம் நாளில் இருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் இருக்காது
இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்புகள் கிட்டத்தட்ட முழுமையாகவே கட்டுக்குள் வந்துவிட்டது. பெரும்பாலான லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள், அதிகாரிகள் ஏற்கனவே வேக்சின் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெரியதாக எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஜகதீப் தன்கர்
இந்தியாவில் ராஜ்ய சபா தலைவராகத் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தான் உள்ளார். அவர் துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். ராஜ்ய சபா கூட்டத்தை இந்த முறை ஜகதீப் தன்கர் தலைமை தாங்க உள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களை பட்டியலிட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள்
அதேநேரம், இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின்னர், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.