"மாநில சட்டசபைகள் மீது மத்திய அரசுக்கு கட்டுப்பாடு இருக்கு.." சுப்ரீம் கோர்ட்டில் மிக முக்கிய வாதம்
டெல்லி: மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று மகாராஷ்டிர மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் முக்கியமான வாதங்களை முன்வைத்தன.
தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்கக் காலம் தாழ்த்துவதாகச் சொல்லி, தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் அரசுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் முடிவெடுக்கக் காலக்கெடுவும் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இது நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக் குறிப்பை அளித்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கேள்விகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு இந்த வழக்கில் தனது வாதத்தை முன்வைத்திருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
ஆளுநர் பதவி எதற்கு?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை மேற்கோள் காட்டி பேசிய கவுல், "ஒரு மசோதா ஏன் ஆளுநருக்கு அனுப்பப்பட வேண்டும்? அந்த மசோதா குறித்து அறிவுறுத்துவதும், எச்சரிப்பதும், பரிந்துரைப்பதும் அவரது கடமை. இந்தக் கடமைகள் அவருக்கு இல்லாமல் போனால் ஆளுநரால் என்ன பயன்? அவர் ஒரு தேவையற்ற அதிகாரியாக மாறிவிடுவார். ஆளுநர் எந்தவொரு அரசியல் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாநிலத்தின் மிக உயர்ந்த நிர்வாகியாக அவர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்" என்றார். இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச அரசின் வாதம் கிட்டத்தட்ட மத்திய அரசுடன் ஒத்துப்போய் இருந்தது.
மத்திய அரசு vs மத்தியப் பிரதேச அரசு
அதேநேரம் ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பும்போது, அதை மாநிலச் சட்டசபை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் என்ன நடக்கும் என்பதில் மத்திய அரசுக்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும் வேறு வேறு பார்வை இருக்கிறது. கடந்த வாரம் மாநில அரசு எத்தனை முறை மசோதாவை அனுப்பினாலும் ஆளுநருக்கு அதை நிறுத்தி வைக்க அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. ஆனால், இரண்டாவது முறை ஒரு மசோதாவை அனுப்பும்போது அதை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது என்பது மபி அரசின் கருத்தாக இருக்கிறது.
நாடாளுமன்றமே சிறந்த இடம்
தொடர்ந்து பல்வேறு வாதங்களைக் கவுல் முன்வைத்தார். அப்போது ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 5 ஆண்டுகள் ஒரு மசோதா மீது முடிவெடுக்காமல் ஆளுநர் நிறுத்திவைத்தாலும் நீதிமன்றத்தால் தலையிட முடியாது எனச் சொல்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கவுல், "ஆளுநரின் செயல்பாடுகள் தவறாக இருந்தால், அதைச் சரிசெய்ய நாடாளுமன்றமே சிறந்த இடமாகும். இதை உங்கள் தீர்ப்புகளிலேயே கூறியுள்ளீர்கள்" என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மத்தியப் பிரதேச அரசு தனது வாதத்தை முடித்துக் கொண்டது. அடுத்து மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான ஹரிஷ் சால்வே, மத்திய அரசுக்கு மாநில சட்டமன்றத்தின் மீது கட்டுப்பாடுகள் இருப்பதாக வாதிட்டார். அதாவது ஆளுநரின் அதிகாரம் மூலம் சட்டமன்றத்தின் மீது மத்திய அரசுக்குக் கட்டுப்பாடு இருப்பதாக அவர் வாதத்தை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள்ளும், மத்திய அரசு தனது எல்லைக்குள்ளும் செயல்படும். உள்நாட்டு அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு இதில் தலையிடும் என்று அம்பேத்கர் கூறியதைத் தலைமை நீதிபதி மேற்கோள் காட்டினார்.
கூட்டாட்சி நாடு இல்லை
தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த ஹரிஷ் சால்வே, "இந்தியா ஒரு கூட்டாட்சி தேசம் அல்ல. கூட்டாட்சி போலத் தோற்றமளிக்கும் ஒரு அரசியலமைப்பைக் கொண்ட நாடு என மட்டும் சொல்லலாம். ஒரு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா சரியாக இல்லாத போது அதை நிராகரிக்கும் ஒரு அமைப்பை, அரசியலமைப்பை உருவாக்கியவர்களே உருவாக்கியுள்ளனர். சரத்து 201-ஐ நாம் திருத்தாதவரை இது தொடர்ந்து இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
அப்படி என்றால் மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை மத்திய அரசு நிராகரிக்க முடியுமா எனத் தலைமை நீதிபதி கேட்டதற்கு, சால்வே "ஆமாம்" என்று மட்டும் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications