'அலட்சியம் வேண்டாம், பாதிப்பு மிக மோசமாக இருக்கும்..' தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய வார்னிங்
டெல்லி: தமிழ்நாடு, கேரளா உட்பட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், பாசிட்டிவ் விகிதமும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் அம்மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை மே மாதம் உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரைகூட சென்றது.
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது. அந்த சமயத்தில் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
மாதச் சம்பளம் 70000 வரை... தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. விவரம்
டெல்டா கொரோனா
நாட்டில் மிக மோசமான டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், குறிப்பாக டெல்டா கொரோனா வைரசே 2ஆம் அலை உச்சம் பெற முக்கிய காரணமாகக் கருதப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மிக வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மே மாதத்திற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்தது.
10 மாநிலங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அல்லது கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த 10 மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அல்லது தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வேக்சின் பணிகள்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் அதேநேரம், இந்த மாநிலங்கள் வேக்சின் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 45+ மேற்பட்டவர்களே கொரோனாவால் உயிரிழக்கும் ஆபத்து அதிகம் என்பதால் அவர்களுக்குப் போடும் பணிகளை மாநில அரசுகள் வேகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா 3ஆம் அலை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலட்சியம் வேண்டாம்
நாட்டிலுள்ள 46 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10% மேல் உள்ளதாகவும், 53 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 முதல் 10 சதவீதத்திற்குள் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா சோதனையை வேகப்படுத்த வேண்டும் என்றும் இந்த நேரத்தில் காட்டும் அலட்சியம் மிக மோசமான பாதிப்பிற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
முன்னதாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா, பல மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த சில வாரங்களாக கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10% கடந்துள்ள மாவட்டங்களில் என்ன மாதிரியான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
Recommended Video
கண்காணிக்க வேண்டும்
தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவார்களில் 80% வீட்டிலேயே தனிமையில் உள்ளனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே செல்வதில்லை என்பதையும் உள்ளூர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேபோல தனிமையில் இருப்பவர்களின் உடல்நிலை மோசமானால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
உருமாறிய கொரோனா
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்தியாவில் புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா வகைகளைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள INSACOG எனப்படும் Indian SARS-CoV-2 Genomics Consortiumஐ மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் அதைச் சமாளிக்க ஏதுவாக ஆக்சிஜன் கையிருப்பை வைத்துக் கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.