பயோலாஜிக்கல் இ நிறுவன தடுப்பூசி... 30 கோடி டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர்.. பற்றாக்குறை நீங்குமா?
டெல்லி: நாட்டில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தற்போது சோதனையில் உள்ள பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் அடுத்தகட்டமாகத் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இருப்பினும், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் தடுப்பூசி பணிகளையே நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டன.
பற்றாக்குறை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட மத்திய அரசே காரணம் என்ற விமர்சனமும் பரவலாக முன் வைக்கப்பட்டது. நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அதேபோல, சொந்த நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
30 கோடி தடுப்பூசிகள்
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளது. இதற்காக சுமார் 1,500 கோடி ரூபாய் பணத்தையும் மத்திய அரசு முன்கூட்டியே அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு சார்பில் பயோடெக்னாலஜி துறையால் ஏற்கனவே 100 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3ஆம் கட்ட சோதனை
பயோலாஜிக்கல் இ நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. அது இப்போது 3ஆம் கட்ட மருத்துவ சோதனைகளிலேயே உள்ளது. முதல் மற்றும் 2ஆம் கட்ட மருத்துவ சோதனைகளில், பயோலாஜிக்கல் இ தடுப்பூசி நம்பிக்கை தரும் முடிவுகளையே அளித்திருந்தது. பயோலாஜிக்கல் இ நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து சேமித்து வைக்கத் தொடங்கும். இன்னும் சில மாதங்களில், ஒப்புதலுக்குப் பிறகு அவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயோலாஜிக்கல் இ
பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசி வெற்றிகரமாக 3ஆம் கட்ட சோதனையை முடித்தால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 2ஆவது கொரோனா தடுப்பூசி என்ற சிறப்பை பெறும். ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோக, 60 கோடி சிங்கள் டோஸ் ஜான்சன் தடுப்பூசியை உற்பத்தி செய்யவும் பயோலாஜிக்கல் இ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போதுவரை 3 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின். சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு (ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது), ரஷ்யா உருவாக்கிய ஸ்புட்னிக் வி. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தற்போது இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. அதன் உற்பத்தி விரைவில் இந்தியாவிலும் தொடங்கப்படும்.