அச்சுறுத்தும் ஓமிக்ரான் கொரோனா.. சர்வதேச விமான சேவை தடையை நீட்டிக்கும் மத்திய அரசு? ஏன் முக்கியம்
டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாகச் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசை எந்தவொரு நாடும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பீட்டா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் தான் கடந்த காலங்களில் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியதால் உலக நாடுகள் உஷார் நிலையில் உள்ளன.
ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வகை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால் மற்ற உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் அதிகமாக, அதாவது சுமார் 30க்கும் மேற்பட்ட மாற்றங்களை இந்த உருமாறிய கொரோனா கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விமானச் சேவை
இதனால் உலகின் பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி சுமார் 20 மாதங்களுக்குச் சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படும் எனக் கடந்த நவ. 26இல் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கின.
மறுபரிசீலனை
இதனால் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக மத்திய அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிப்பது, அவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்வது ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
என்ன ஆலோசனை
இது குறித்து உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில், உலகெங்கும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலவரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உலகளவில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்கும் முடிவை மறு ஆய்வு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video
உருமாறிய ஓமிக்ரான் கொரோனா
இந்த உருமாறிய ஓமிக்ரான் கொரோனா முதலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பிறகு போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியாவில் நேற்றைய தினம் பெங்களூரு விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை எனக் கண்டறிய அந்த 2 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.