அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
டெல்லி: அடுத்த ஆண்டின் இறுதிப் பகுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக் கூடும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு ஜிதேந்திரசிங் அளித்த பதில்:
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும்.
சந்திரயான் திட்டத்தை செயல்படுத்துவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன. இத்திட்டப் பணிகள் கொரோனாவால் பாதிப்படைந்தன.
எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் லாக்டவுன் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இவ்வாறு ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.