உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று பணி ஓய்வு - புதிய தலைமை நீதிபதி யுயு லலித்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்க உள்ளார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தில் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி என்.வி.ரமணா பிறந்தார். தொடக்கத்தில் 3 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றி பின்னர் நீதித்துறையில் கால் பதித்தார் என்.வி.ரமணா.1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக பணியை தொடங்கி 2000-ம் ஆண்டில் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதியானார் அவர்.
2013-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நியமிக்கப்பட்டார் என்.வி.ரமணா. அவரது பணிக் காலம் இனு ஆகஸ்ட் 26-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
நாட்டின் மரபுகளின் படி புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சீனியரான யு.யு.லலித்தை புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்திருந்தார் என்.வி.ரமணா.
ஓய்வு பெற இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை... நாளையுடன் ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 27-ந் தேதி உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு.லலித் பணி காலம் நவம்பர் 8-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இன்றுடன் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றும் நேற்று முன்தினமும் பல முக்கிய வழக்குகளை விசாரித்தார். இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச், இது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்க வேண்டும்; மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார். அப்போது, பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் எங்கே மரியாதை இருக்கிறது என குமுறலையும் வெளிப்படுத்தினார்.
அத்துடன் இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுகவை காட்டமாக என்.வி.ரமணா விமர்சித்தார். இலவசங்களை நியாயப்படுத்துகிற திமுக மற்றும் தமிழக அமைச்சர்களின் பேட்டிகளை சுட்டிக் காட்டி, அறிவு என்பது ஒரு கட்சிக்கோ, தனிநபருக்கோ சொந்தமானது அல்ல என கூறியது சர்ச்சையானது.
மேலும் நேற்று பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், குஜராத் பில்கிஸ் பானு வழக்கு, பண பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கு, பிரதமர் மோடியின் பஞ்சாப் பயண பாதுகாப்பு விவகாரம் ஆகிய வழக்குகளை விசாரித்து உத்தரவிட்டிருந்தார் என்.வி.ரமணா.
முன்னதாக ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் 6 மாதம் இலவச பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.