இதில் நாம் பலவீனம் தான்.. சீனாவால் இந்தியா மீது தாக்குதல் நடத்த முடியும்... பிபின் ராவத் ஓபன் பேச்சு
டெல்லி: தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே இடைவெளி இருப்பது உண்மைதான் எனக் குறிப்பிட்டுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறனைச் சீனா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
சைபர் தாக்குதல்கள் என்பது உலக நாடுகளில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவழிப்பது போல, சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அனைத்து நாடுகளும் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய மீது சீனாவால் சைபர் தாக்குதல் நடத்த முடியும் என எச்சரித்துள்ளார்.
சீனா முன்னணியில் உள்ளது
இது குறித்து பிபின் ராவத் கூறுகையில், சைபர் துறையில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே "மிகப்பெரிய வேறுபாடு" உள்ளது, சீனா புதிய தொழில்நுட்பங்களுக்குத் தேவையான நிதிகளை அதிகளவு ஒதுக்கீடு செய்கிறது. இரு நாடுகளுக்கிடையில் பல ஆண்டுகளாகத் திறன் அளவில் வேறுபாடு இருந்துள்ளது. அதேபோல தொழில்நுட்ப துறையில் இந்தியாவை விடச் சீனாவுக்குக் கொஞ்சம் முன்னணியில் இருப்பது உண்மை தான்.
சீனா சைபர் தாக்குதல்
நம் நாட்டின் மீது சைபர் தாக்குதல்களைத் தொடுக்கும் ஆற்றல் சீனாவுக்கு உள்ளது. இதன் மூலம் நாட்டின் பெரும்பாலான அமைப்புகளை அவர்களால் சீர்குலைக்க முடியும் என்பதையும் நாங்கள் அறிவோம். எனவே, சைபர் தொழில்நுட்பத்தில் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். இதை சமாளிப்பது குறித்து தீவிரமாகச் சிந்தித்து வருகிறோம். சைபர் தாக்குதல்களில் இருந்த தப்ப வலுவான ஃபையர்வால்களை உருவாக்கவும் முயல்கிறோம்.
நீண்ட நேரம் பாதிக்காது
நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தனியாக ஒரு சைபர் பிரிவு உள்ளது. எனவே, சைபர் தாக்குதல் எதாவது ஒரு அமைப்பு முடங்கினாலும்கூட, அதன் தாக்கம் நீண்ட நேரம் இருக்காது. ஃபையர் வால்கள் மூலமும் வேறு பல விஷயங்கள் மூலமும் வலுவான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த முயல்கிறோம். மேற்குலக நாடுகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளும் நிலையை மாற்றி, நம்மைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டும்.
நம் நாட்டில் வலுவான தலைமை
வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு திறனைக் கொண்டு எதிர்கொள்ள முடியும். ஆனால், அதே நேரம் உள்நாட்டில் ஸ்திரத்தன்மைக்கும் ஒரு வலுவான அரசு, பொருளாதார வளர்ச்சி, சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு, நீதி ஆகியவை தேவை. நமது நாட்டின் பாதுகாப்பு, மதிப்புகள் ஆகிய தேசிய நலன்களை உறுதி செய்ய தற்போதுள்ள தலைமைக்கு நல்ல தீர்க்கமான ஆர்வம் உள்ளது. இருந்தாலும், மாற்றம் என்பது ஒரு மணி நேரத்தில் நடந்துவிடாது என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கான் நிலை
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை குறித்துக் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானில் அதிகரித்து வருகிறது. அங்கிருக்கும் நிலைமையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அங்கு எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், தேவையான நேரத்தில் சரியான நடவடிக்கையை எடுப்போம். அதேபோல பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தேவையானவற்றுக்குச் செலவழித்து வருகிறோம்.