லடாக் பகுதியில் மீண்டும் சித்து விளையாட்டை தொடங்கும் சீனா .. ராணுவ தலைமை தளபதி பகீர் தகவல்!
டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

கடும் மோதல்
சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

உள்கட்டமைப்பை உருவாக்குகிறது
இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்தனர். இந்த நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார்.
Recommended Video

வலிமையானவர்கள்
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எம்.எம்.நரவானே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கிழக்கு லடாக் பகுதியில் அதிக துருப்புக்களை அனுப்ப அதன் பக்கத்தில் சீனா நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. நாம் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கும்படி கண்காணித்து வருகிறோம். மேம்பட்ட ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நமது படை வீரர்கள் வலிமையானவர்கள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

பேச்சுவார்த்தைகள்
சீனாவுடன் எல்லா நிலைகளிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, இதுவரை 12 சுற்றுகள் நடந்துள்ளன. 13-வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெப்சாங் மற்றும் டெம்சோக் போன்ற பிற பகுதிகளில் இரு நாட்டு படைகள் திரும்ப பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் அத்துமீறல்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறல் குறித்து அவர் கூறுகையில், ' கடந்த இரண்டு மாதங்களிலிருந்து, காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி செய்யப்பட்டது, அதை நாங்கள் முறியடித்தோம். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியாமல் இந்த ஊடுருவல் சாத்தியமில்லை' என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications