ராகுலுடன் காங். முதல்வர்கள் சந்திப்பு! ம.பி. முதல்வர் பதவியில் இருந்து விலக கமல்நாத் முடிவு?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். அப்போது ராகுல் தமது ராஜினாமா முடிவை வாபஸ் பெற அவர்கள் வலியுறுத்தினர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அமேதி தொகுதியில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்காதபோதும் தமது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார்.
ராகுல் காந்தியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்டமைப்பை மறுசீரமைக்க விரும்புகிறார். அதனால் மூத்த தலைவர்கள் தாங்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புகிறார். இதனடிப்படையில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கு சமாஜ்வாதி, திரிணாமுல் காங். திடீர் ஆதரவு
|
ராகுல் வீட்டு முன்பு போராட்டம்
100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவும் செய்துள்ளனர். இந்த ராஜினாமா நாடகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ராகுல் காந்தி தமது ராஜினாமா முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு இன்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.
|
உ.பி. அஜய் சரஸ்வத் ராஜினாமா
மேலும் இன்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் செயலாளர் அஜய் சரஸ்வத் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
|
ராகுலுடன் முதல்வர்கள் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான அமரீந்தர்சிங், கமல்நாத், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், நாராயணசாமி உள்ளிட்டோர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது ராஜினாமா முடிவை ராகுல் கைவிட அவர்கள் வலியுறுத்தினர்
கமல்நாத் பதவி விலக முடிவு?
இதனிடையே மத்திய பிரதேச முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு கமல்நாத் விருப்பம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தாம் ராஜினாமா செய்ய விரும்புவதாக கமல்நாத் கூறியுள்ளாராம்.