அடுத்த ஆண்டு காங். அகில இந்திய தலைவர் தேர்தல்... ராகுல் காந்தி மீண்டும் தலைவராகிறார்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
முதல்வர் குறித்த சர்ச்சையான ட்விட்டர் பதிவு.. நள்ளிரவில் கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன்!
பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இது காங்கிரஸுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸில் கலகம்
பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அக்கட்சியின் 23 மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சி பிளவுபடும் அபாயம் ஏற்பட்டது. பாஜகவின் தூண்டுதலாலேயே மூத்த தலைவர்கள் இப்படி பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள்
மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் என காங்கிரஸ் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்ந்தது. பஞ்சாப்பில் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் பதவியை ராஜினாமா செய்யும் நிலைமையும் ஏற்பட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியில் யார் முடிவெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை என கபிசிபல் போன்ற மூத்த தலைவர்கள் ஆதங்கப்பட்டனர். அதேபோல், காங்கிரஸ் கட்சி தம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என மற்றொரு மூத்த தலைவர் ப. சிதம்பரமும் வலியுறுத்தி இருந்தார்.
5 மணிநேர கூட்டம்
இந்த பின்னணியில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா பாதிப்பு காலத்துக்குப் பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டி முதல் முறையாக நேற்று கூடி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தது. சுமார் 5 மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
அடுத்த ஆண்டு தேர்தல்
இதன்பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள், மாநில செயற்குழு, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
மீண்டும் ராகுல் காந்தி
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்தியே மீண்டும் ஏற்க வேண்டும் என்றும் நேற்றைய கூட்டத்தில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்பது குறித்து ராகுல் காந்தி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி கூறுகையில், அனைவரும் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். இது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும் என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.