'கை' கழுவும் சீனியர்ஸ்-டெல்லியில் இன்று காங். காரிய கமிட்டி-தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வரும் நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி (காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்) நடைபெறுகிறது. வெளிநாட்டில் உள்ள சோனியா குடும்பத்தினர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி மேலிடமான 2019-ம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்த பின்னர் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லது அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த இயலாமையை சரி செய்ய மூத்த தலைவர்கள் வலியுறுத்திப் பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இம்மியளவு கூட இதில் அக்கறைகாட்டவில்லை என்பதுதான் புகார். இதனால்தான் 23 மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதிப் பார்த்தனர். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி ஒவ்வொரு தலைவராக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தது அந்த கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸின் பேரழிவுக்கு மொத்த காரணமமும் ராகுல் காந்திதான் என ஒரே போடாக குலாம்நபி ஆசாத் பகிரங்க கடிதம் எழுதி வெளியிட்டார்.
குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் மூத்த தலைவர் எம்.ஏ.கான் நேற்று காங்கிரஸில் இருந்து வெளியேறிவிட்டார். அவரும் ராகுல் காந்திதான் அத்தனை அழிவுக்கும் காரணம் என விமர்சித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அலை அலையாக வெளியேறக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இத்தகைய களேபரங்களுக்கு மத்தியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி- காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. தற்போது சோனியா காந்தி வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். அனைவருமே இன்று நடைபெறும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளனர்.
இன்றையக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேறியது தொடர்பான விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்து அதற்கான அட்டவணைக்கு ஒப்புதல் வழங்கப்படலாம். இன்னொரு பக்கம், இத்தனை அனர்த்தங்களுக்குப் பின்னரும் சோனியா காந்தியே எங்கள் தலைவர் என்ற அரதப் பழசான டெக்னிக் தீர்மானம் ஒன்றையும் காங்கிரஸ் காரியக் கமிட்டி நிறைவேற்றும் என தெரிகிறது.