ஆம் ஆத்மியுடன் கூட்டணி சரி வரவில்லை.. டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரசும் ஆம் ஆத்மியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளன.
தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளும் தற்போது பாஜக வசம் உள்ளன. வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்கட்சிகளும் அதீத முனைப்பு காட்டி வருகின்றன. டெல்லியை தொடர்ந்து மூன்று முறை தனதாக்கி முடி சூடிய காங்கிரஸ் கட்சி, ஷீலா தீட்ஷித் தலைமையில் ஆட்சி அமைத்து வந்தது. பின்னர் புதிதாக தோன்றிய ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் ஆம் ஆத்மி மீது டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் முதலான மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்த காங்கிரஸ் தன்னோடு ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை. இருந்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசில் ஒரு சில தலைவர்களும் கருதுகின்றனர். ராகுலும் இந்த முடிவிலேயே இருந்துவந்தார். இதனால் ஷீலா தீட்ஷித் போன்ற மூத்த தலைவர்களையும் தாண்டி ராகுல், அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசிவந்தார். இதனையடுத்து இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கும் என்று கூறப்பட்டது. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 தொகுதிகளும் மீதமுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்படும் என்று பேசப்பட்டு வந்தது.
அதாவது டெல்லியின் முக்கிய தொகுதிகளான சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி, புது டெல்லி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, மற்றும் தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என்ற அளவில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
இந்தகூட்டணி அமைய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தரப்பிலிருந்து சுபாஷ் சோப்ரா, தாஜ்தர் பாபர், அரவிந்தர் சிங், அஜய் மக்கான் ஆகியோர் மிகுந்த முனைப்பு காட்டி வந்தனர். இவர்கள் டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் கணிசமான இடங்களை வெல்ல முடியும் என்று கருதினர். ஆனால் ஷீலா தீட்ஷித் தலைமையிலான இன்னொரு பிரிவு தலைவர்கள் ஆம் ஆத்மீயுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியோடு காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் பி சி சாக்கோ, முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் ஆம் ஆத்மியுடன் எவ்வித கூட்டணியும் இல்லை என்றும் மக்களவை தேர்தலை காங்கிரஸ் தனித்தே சந்திக்கும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் போன்றோர் பல முயற்சிகளை மேற்கொண்டும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமையவில்லை. இந்த கூட்டணி அமையாமல் போனதற்கு அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தல் காரணம் என கூறப்படுகிறது. 2020 ம் ஆண்டு டெல்லிக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அடுத்த ஆண்டும் அது தொடரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி சட்டப் பேரவை தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும்போது காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை ஆம் ஆத்மி ஒதுக்காது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் டெல்லியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் காங்கிரசுக்கு இது ஒரு முட்டுக் கட்டையாக அமையும் என்பதால் இப்போதே கூட்டணி இல்லை என்ற முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.