சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.. பஞ்சாப்பில் செஞ்சு காட்டிய சித்து, ராகுல், பிரியங்கா கோஷ்டி!
டெல்லி: தமிழில் சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது என்பதற்கு மிக நல்ல உதாரணமாக பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் தேர்தல் விளையாட்டுகள் அமைந்துவிட்டன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர்சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் 2017 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்கிற அதிருப்தி ஒரு பக்கம் இருந்தாலும் தமது தனிப்பட்ட செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டவராகவே அமரீந்தர்சிங் இருந்தார். பாட்டியாலா தொகுதியை 20 ஆண்டுகளாக கோட்டையாக வைத்திருந்தவர் அமரீந்தர்சிங்.
பஞ்சாப் நலனில் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் - ஆம் ஆத்மி வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
சகிப்புத்தன்மை இல்லை
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு காலத்தில் இருந்து பிரியங்கா காந்தி காலம் வரை தங்களை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்கிற அதிகாரம் அந்த குடும்பத்துக்கு தொடருகிறது. அதனால் அமரீந்தர்சிங்குக்கு குடைச்சல் கொடுத்தது சோனியா காந்தி குடும்பம். அமரீந்தர்சிங்கை ஆட்டம் காண வைக்க ராகுலும் பிரியங்காவும் தேர்வு செய்தது நவ்ஜோத்சிங் சித்து என்கிற மாஜி கிரிக்கெட் வீரரைத்தான்.
களமிறக்கப்பட்ட சித்து
ராகுலும் பிரியங்காவும் சொன்னதை எல்லாம் கேட்கும் கிளிபிள்ளையாகவே நவ்ஜோத்சிங் சித்து செயல்பட்டார். ஒருகட்டத்தில் அமரீந்தர்சிங் முதல்வர் பதவிக்கு ஆகப் பெரும் குடைச்சலை கொடுத்தார் சித்து. அவர்தான் டெல்லி மேலிடத்தாலேயே களமிறக்கப்பட்டவராயிற்றே.. அதனால் அமரீந்தர்சிங்கின் டெல்லி படையெடுப்புகள் எதுவும் பயன் தரவில்லை. சித்துவுக்கு துணை முதல்வர் பதவி ப்ளஸ் மாநில தலைவர் பதவி என்றெல்லாம் சோனியா குடும்பம் பாடாய்படுத்தியது அமரீந்தர்சிங்கை.. எத்தனையோ போராடிப் பார்த்தாலும் சோனியா குடும்பத்தின் விளையாட்டுக்கு முன்னால் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் வேறுவழியே இல்லாமல் முதல்வர் பதவியை தூக்கிப் போட்ட கையோடு காங்கிரஸுக்கும் முழுக்குப் போட்டுவிட்டார். பின்னர் தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் இணைந்தார் அமரீந்தர்சிங்.
சிக்சர் அடித்தும் நோ பலன்
இனி நாம்தான் முதல்வர் என கனவில் மிதந்தார் நவ்ஜோத்சிங் சித்து.. ஆனால் இங்கேயும் ராகுலும் பிரியங்காவும் அடுத்த விளையாட்டை விளையாடினர். சரண்ஜித்சிங் என்கிற தலித்தை முதல்வராக்கினர். என் கிட்டேயே உங்க விளையாட்டை காட்டுறீங்களா? என நவ்ஜோத்சிங்கும் தம்முடைய ஆட்டத்தை ஆடினார்..அதுவும் சிக்சர் சித்துவாயிற்றே.. அவரது ஆட்டத்தில் அப்படி ஒரு அனல் பறந்தது.. பறந்தன சிக்சர்கள்.. ஆனால் காங்கிரஸ் எனும் அணிக்கு கிடைத்தது என்னவோ தோல்விதான்.
விளையாட்டுத்தனம்
சித்துவை களமிறக்காமல் அமரீந்தர்சிங்கின் தனித்துவத்தை அங்கீகரித்திருக்க வேண்டும் காங்கிரஸ் மேலிடம். அதைசெய்யாமல் சிறுபிள்ளைத்தனமாக சித்துவை இறக்கிவிட்டு; அவரது சித்து வேலைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவுதான் இந்த மிக கேவலமான தோல்வி. அதனால்தான் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதற்கு உதாரண்மாக சித்து, ராகுல், பிரியங்கா கூட்டணியை சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.