1000 கோடிக்கு "ஹேர்கட்" யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா? ப.சிதம்பரத்துக்கு வந்ததே கோபம்! என்னாச்சு?
டெல்லி : வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து '1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?' முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காகவும், புதிய முதலீடுகளுக்காகவும் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து கடனை முறையாக வசூலிக்காமல் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
பண மோசடி தடுப்பு சட்ட தீர்ப்புக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் அப்பீல்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்
கடன் தள்ளுபடி
அதே நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் தற்போதுள்ள சூழலில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறி இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது சுமார் 517 என்ற எண்ணிக்கையிலான கடன் கணக்குகளில் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதோடு இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ஏற்கனவே மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் விமர்சித்து வரும் நிலையில், வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து '1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?' முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," இதற்கு முன் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ஒரு வித நடுக்கத்துடன் தள்ளுபடி செய்யும்.
வங்கிகளின் கடன்
ஏனெனில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அவர்களை கேள்வி கேட்கும். ஆனால் தற்போது திவால் செயல்முறையின் மூலம் வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி வங்கிகளின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடன் தள்ளுபடிக்கான தீர்மானத்தை அங்கீகரித்ததால் நிறுவனங்கள் கடனில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
"ஹேர்கட்"
வங்கிகள் இதை "ஹேர்கட்" என அழைக்கிறது. இதேபோல 517 வழக்குகளில் 5,32,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு வழக்கிற்கு 1000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. நீங்கள் 1000 கோடியில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டதுண்டா?" என விமர்சித்துள்ளார். இதனையடுத்து இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருவதோடு விவாதங்களையும் நடத்தி வருகின்றனர்.