காங். தலைவர் தேர்தல்: நாளை வேட்பு மனுத் தாக்கல்- ரேஸில் கெலாட், சசி தரூர், கமல்நாத், திக்விஜய்சிங்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 19-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி செய்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை தம்மிடம் தெரிவித்ததாக அசோக் கெலாட் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். இதனை அசோக் கெலாட் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து சசி தரூர் களம் காண்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று சோனியா காந்தியை அசோக் கெலாட் இன்று சந்தித்தார். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் சென்ற சசி தரூர், வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அசோக் கெலாட், சசி தரூர் இடையே மட்டுமே போட்டி என்றிருந்த நிலையில் மூத்த தலைவர்களான திக்விஜய்சிங், கமல்நாத் ஆகியோரும் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூடு பிடிக்கிறது காங். தலைவர் பதவி தேர்தல்- அசோக் கெலாட், சசி தரூரை தொடர்ந்து திக்விஜய்சிங் போட்டி?
காங்கிரஸ் கட்சியில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறைதான் வாக்கெடுப்பு மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட மாநில நிர்வாகிகள் 10 பேர் வேட்புமனுவில் கையெழுத்திட வேண்டும். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுமார் 9,000 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் அவர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோஷம் வலுத்துள்ளது. இதனை காங்கிரஸ் மேலிடமும் ஆதரிப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் அசோக் கெலாட் , காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தான் முதல்வர் பதவி சச்சின் பைலட் அல்லது வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.