காங்கிரஸ்-க்கு விலைவாசி உயர்வு பிரச்னையில்லை.. ராமர் கோவில் எதிர்ப்பே நோக்கம்.. சொல்கிறார் அமித் ஷா!
டெல்லி: காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் கறுப்பு சட்டை அணிந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுமட்டுமல்லாமல் போராட்டத்திற்கு முன் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பாஜக அரசின் தவறுகளை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டினார். இது மக்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கறுப்பு சட்டை பேரணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கதர் உடையில் போராட்டம் நடத்தியதை பல்வேறு முறை பார்த்துள்ளோம். ஆனால், நேற்று கறுப்பு உடை அணிந்ததற்கு வேறு காரணம் இருக்கிறது.
அந்த காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு இதே நாளில் தான் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுமார் 550 ஆண்டுகள் நீடித்த பிரச்னைக்கு பிரதமர் மோடி அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளார். ராமர் கோவில் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஆனால் மத்தியில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், ராமர் கோவில் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்று நாட்டில் வன்முறையோ, கலவரமோ இல்லை. அமைதியான சூழல் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல.
அதேபோல் ராமர் கோவிலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. அதனால் தான் மறைமுகமாக இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்றபடி விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை விசாரணை என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications