மெல்ல மெல்ல உயரும் கொரோனா.. இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? எய்ம்ஸ் EX இயக்குனர் பதில்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு மீண்டும் 200 -ஐ கடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், லாக்டவுன் போட வேண்டியதற்கான ஒரு தேவை ஏற்படுமா? என்ற கேள்விக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவில் தற்போது ஒமிக்ரான் வகை கொரோனாவின் மாறுபாடு அடைந்த புதிய வகை பிஎப் 7 என்னும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பை இந்த புதிய வகை கொரோனா ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் பரவும் கொரோனா
அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இந்த பிஎப் 7 வகை கொரோனா அறியப்படுவதால் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த புதிய பிஎப் 7 வகை கொரோனா சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. குளிர்காலத்தில் பரவும் இந்த புதிய வகை வைரஸ் மீண்டும் உலகளாவிய அளவில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் பரவலாக எழுந்துள்ளது.

குஜராத்தில் 2 பேருக்கு
இந்தியாவிலும் குஜராத்தில் 2 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்து மக்கள் கொரோனவை பெரும்பாலும் மறக்கத் தொடங்கியிருந்த வேளையில் திடுதிடுப்பென வந்த புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மக்களை கலங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சீனாவில் கொரோனா அதிவேகமாக பரவுவதும் மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகள் நிரம்பி வழிவதும் என அந்த நாட்டில் இருந்து வெளிவரும் தகவல் மக்களுக்கு சற்று அதிர்ச்சிகரமாகவே அமைந்துள்ளது.

கொரோனா பரிசோதனை கட்டாயம்
இந்தியா பல்வேறு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதுபோக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மக்களுக்கு போதிய அளவு இயற்கையான எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு தன்மை இல்லாமல் போனதே அந்த நாட்டில் அதிவேகமாக பரவுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

லாக்டவுன் எதுவும் தேவைப்படாது?
இதனால் இந்தியாவில் அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, இந்தியாவில் தற்போதைய சூழலில் லாக்டவுன் எதுவும் தேவைப்படாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரன்தீப் குலேரியா கூறியதாவது:- இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தற்போது இந்தியா சவுகரியமான சூழலில்தான் உள்ளது. தற்போதைய சூழலில், சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடையோ.. லாக்டவுன் போடுவதற்கான அவசியமோ எதுவும் இல்லை" என்றார்.

எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது
வரும் நாட்களில் லாக்டவுன் போடப்படுவதற்கான தேவை எழுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-- இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு ஹைபிரிட் எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது. அதாவது இயற்கையான எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசியால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைத்து விட்டது. எனவே இந்தியாவில் தொற்று தீவிரமாக பாதிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது லாக்டவுன் தேவை இருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications