டெல்லி அரசு தடாலடி- வீடுகளுக்கே மதுபானங்கள் சப்ளை- மொபைல் ஆப், ஆன்லைனில் ஆர்டர் செய்யலாமாம்!
டெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் மொபைல் ஆப் மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உக்கிரத்தைக் காட்டி வருகிறது. தற்போதைய நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 1.5 லட்சம் என்ற அளவில் இருந்து வருகிறது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா.. டெல்டா என அழைக்கப்படும்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு
டெல்லி லாக்டவுன் நீட்டிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் லாக்டவுன் அமல்படுத்தி உள்ளன. டெல்லியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் வரும் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டும் நீட்டிக்கப்பட்டும் வருகிறது.
மதுபான பார்கள் மூடல்
லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மதுபான பார்கள், ஹோட்டல்கள் ஆகியவையும் ஜூன் 7-ந் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணங்களில் 30 பேர் மட்டுமே பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் வீடுகளுக்கே மது சப்ளை
இந்த நிலையில் லாக்டவுனில் புதிய தளர்வாக, வீடுகளுக்கே மதுபானங்களை சப்ளை செய்ய அனுமதி அளித்துள்ளது டெல்லி அரசு. இதற்கான மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தில் ஆர்டர் செய்து பணம் கட்டினால் போதும்.. வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விநியோகிக்கலாம் என அனுமதித்துள்ளது இந்த புதிய தளர்வு.
யார் யாருக்கு அனுமதி?
அதுவும் L-13 லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வீடுகளுக்கு சென்று மதுபானங்களை சப்ளை செய்ய அனுமதிக்கப்படுகிறதாம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்திருந்த போது மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே மதுபானங்களை சப்ளை செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலனை செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.