கொரோனா ஓயவில்லை.. எச்சரிக்கையாக இருப்போம்.. எந்த சூழலையும் எதிர்கொள்வோம்: மத்திய அமைச்சர் மாண்டவியா
டெல்லி: கொரோனா பரவல் ஓயவில்லை; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகை உருக்குலைத்துப் போட்ட கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நமது நாட்டில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நித்திஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலக அளவில் நிலவி வரும் கொவிட் 19 சூழ்நிலை மற்றும் உள்நாட்டு நிலைமைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார். சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதார அமைச்சர்,கொவிட் 19-ன் புதிய உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொவிட் 19 பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் தினசரி கொவிட் பரவல் சராசரி தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறிய மத்திய சுகாதார அமைச்சர், 2022 டிசம்பர் 19, வார இறுதியில் தினசரி பாதிப்பு சராசரியாக 158 என்று குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார் எனினும் உலக அளவில் தினசரி சராசரி அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர் கடந்த 6 வாரங்களில் 2022 டிசம்பர் 19 வார இறுதியில் உலக அளவில் தினசரி கொவிட் சராசரி பாதிப்பு 5.9 லட்சமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர், கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது. இன்று வல்லுநர்கள் குழுவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா பரவல் ஓய்ந்துவிடவில்லை. நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்றார் மத்திய அமைச்சர் மாண்டவியா.

கொரோனா பரவல் தொடர்பாக வல்லுநர் விகே பால் கூறுகையில், தற்போதைய நிலையில் விமானத்தில் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களில் முக கவசம் அணிவிக்க வேண்டும். எப்போதும் முக கவசம் அணிந்து இருங்கள். இந்தியாவில் முன்னெச்சரிக்கை டோஸ்களை 27% பேர்தான் போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 659,121,949. கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கை 6,676,144. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 632,426,830. ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 206,943. தென்கொரியாவில் 88,172 ஆகவும் பதிவாகி உள்ளது. ஜப்பானில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 292 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது வரை கட்டுக்குள் இருந்து வருகிறது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44142242. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44142242. இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 530680. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்குசி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3408. இது மொத்த பாதிப்பில் 0.01% ஆகும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 2,20,01,45,981 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த பல மாதங்களாகவே கொரோனாவால் மரணங்கள் எதுவும் நிகழ்வவில்லை. தமிழகத்தில் 90%-க்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா மரபணு சோதனை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அரிவுறுத்தல் விடுத்துள்ளது. தமிழகத்தில் போதுமான அளவுக்கு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன என்றார்.
இதனிடையே கொரோனா பரவலைக் காரணம் காட்டி மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரைக்கு மத்திய அரசு நெருக்கடி தர தொடங்கி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு புதிய கொரோனா பாதிப்புமே இல்லாத நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் கேள்வி.












Click it and Unblock the Notifications