இந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. பல சிறப்பு இருந்தும் கோவாக்சினுக்கு WHO அனுமதியில்லை.. ஏன்?
டெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையிலும்கூட இன்னும் அதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அதிகப்படியான மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைக் கொண்டு தற்போது வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களை உருவாக்கிய தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சினாக இது கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் 3ஆம் கட்ட மருத்துவ முடிவுகள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

மற்ற நாடுகள்
அதில் கோவாக்சின் தடுப்பூசி 77.8% வரை பலன் அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தத் தடுப்பூசி ஆல்பா உள்ளிட்ட சில உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும்கூட தற்போது வரை உலக சுகாதார அமைப்பு இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் தரவில்லை.

வெளிநாட்டுப் பயணம்
மேலும், பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் எனப் பல நாடுகளும் வெளிநாட்டில் இருந்து திரும்புவார்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அதிலும்கூட எந்த நாடும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காகக் கடந்த சில மாதங்களாகவே பாரத் பயோடெக் நிறுவனம் முயன்று வருகிறது. உலக சுகாதார அமைப்பு கோரிய தகவல்களில் 90% ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் இதர ஆவணங்கள் சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதையடுத்து சில வாரங்களில் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

இன்று ஆலோசனை
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையைக் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக பாரத் பயோடெக் மற்றும் உலக சுகாதார அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெறுவது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிதி ஆயோக் குழு உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார், WHO ஒப்புதலை முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்த மைல்கல்லை அடைவோம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications