கொரோனா 2வது அலையில் சிக்கித்தவிக்கும் இந்தியா - ஒரே நாளில் 2023 பேர் மரணம் - 3 லட்சம் பேர் பாதிப்பு
நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டுள்ளது. 2,95,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 2023 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த 5 நகரங்களில் லாக்டவுன் - அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,16,130 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 ஆக உயர்ந்துள்ளது.
1,82,553 பேர் கொரோனாவிற்கு மரணம்
நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில்
62,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 29,574 பேரும், டெல்லியில் 28,395 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 21,794 பேரும், கேரளாவில் 19577 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் 15,625 பேரும், மத்திய பிரதேசத்தில் 12727 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 12206 பேரும், ராஜஸ்தானில் 12201 பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10956 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
மோடி பேச்சு
கொரோனா பாதிப்பில் 52 சதவிகிதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ளதாக நேற்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார். லாக்டவுன் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். தகுதிவாய்ந்த அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைவருக்கு தடுப்பூசி
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது நாட்டில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, முன்களப் பணியாளர்கள் முதியவர்களுக்கு பெரும்பாலும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோரும் வரும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
இரவு நேர லாக்டவுன்
வட மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.