பரவுகிறது கொரோனா.. இந்த 5 மாநிலங்களும் உஷாராக இருக்க வேண்டும்.. மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மெல்ல அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் கொரோனா தலைதூக்கி உள்ள மகாராஷ்டிரா, மிசோராம், உத்தர பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசமான டெல்லிக்கும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் தலைநகர் டெல்லி உள்பட சில இடங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லியில் 2,671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. இதனால் நோய் உறுதி செய்யும் தன்மை உயர்ந்து வருகிறது.
முரண்பாடு... கொரோனா பலி 8 மடங்கு அதிகரிப்பு... உலக சுகாதார நிறுவன கணக்கீட்டுக்கு இந்தியா எதிர்ப்பு
5 இடங்களில் அதிகரிப்பு
குறிப்பாக இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் தற்போது அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தான் அதிகளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. நோய் உறுதி செய்யும் தன்மையும் உயர்ந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,860 ஆக உயர்ந்து இருந்தது.
மத்திய அரசு கடிதம்
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் டெல்லி மற்றும் 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுரை வழங்கி கடிதம் எழுதியுள்ளது. அதன்படி அரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான டெல்லிக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தடுப்பு நடவடிக்கை
நோய் பாதிப்பும், நோய் உறுதி செய்யும் தன்மையும் உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலம்/யூனியன் பிரதேசத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சளி, காய்ச்சல், சுவாச பிரச்சனைகளுடன் வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனரா என்பதையும் ஆராய வேண்டும்.
5 நடைமுறைகள் கட்டாயம்
பரிசோதனை செய்தல், பாதிப்பை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்புக்கான வழிமுறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட 5 நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.