முழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்!
டெல்லி: 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூரில் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
இதேபோல் வார இறுதி ஊரடங்கு போடப்பட்டுள்ள டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பரபரப்பாக காணப்படும் முக்கிய நகரங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்? அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
போட்டு தாக்கும் கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. இந்தியாவில் தினமும் 2,50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் தினமும் 60,000-க்கும் மேற்பட்ட அதிக பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையில் மட்டும் தினமும் 8,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருக்கின்றன. கொரோனவை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு 15 நாட்கள் முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது . அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதால் மும்பை, புனே மற்றும் நாக்பூரில் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
முடங்கிய லக்னோ
உத்தரபிரதேசத்தில் தினமும் 25,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்ததால் அங்கு மே 15-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் மருந்து கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் லக்னோ நகரம் முழுமையாக முடங்கியுள்ளது. சாலையில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியிலும் ஊரடங்கு
தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு 15,000-க்கும் மேல் சென்று விட்டதால் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 2-வது வாரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கு விதிகளை மீறிய150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து 500-க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு போலீசார் செய்துள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டால் தினமும் முழு ஊரடங்கு போட வேண்டியதிருக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். இதேபோல் வார இறுதி ஊரடங்கு காரணமாக மத்தியபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் போபால் மற்றும் சண்டிகர் நகரங்களில் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், காய்கறி மற்றும் பழ விற்பனையாளர்களை விற்பனை செய்வோரைத் தவிர்த்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.